Home » » முடிவுக்கு வந்த வாலியின் 60 ஆண்டு கலைப் பயணம் !

முடிவுக்கு வந்த வாலியின் 60 ஆண்டு கலைப் பயணம் !

ரெங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் 1931-ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் இருந்தே இலக்கிய ஈடுபாட்டில் இருந்த வாலி, "நேதாஜி' எனும் கையெழுத்து பத்திரிகையை நடத்தினார். இதன் முதல் பிரதியை எழுத்தாளர் கல்கி வெளியிட்டார்.

வாலிக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாக படம் வரையும் திறமையையும் பெற்றிருந்தார். "ஆனந்த விகடன்" இதழில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே வர வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தவரிடம் பள்ளித் தோழர் ஒருவர் ""மாலியைப் போல் நீயும் நல்ல சித்திரக்காரனாக வர வேண்டும்'' என்று கூறி வாலி என்று பெயர் சூட்டினார் என்று கூறப்படுகிறது.

வாலியின் இலக்கிய ஈடுபாட்டை அறிந்து வியந்த அன்றைய திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி வானொலிக்கு கதைகள், நாடகங்களை எழுதிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

கலையுலகில் நாடக ஆசிரியராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட வாலி, 1958-ஆம் ஆண்டில் வெளிந்த "அழகர் மலைக்கள்ளன்' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.

இதையடுத்து 1962-ஆம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி இசையமைப்பில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடி "இதயத்தில் நீ' படத்தில் இடம் பெற்ற "'பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா...'' என்ற பாடல் வாலிக்கு தனித்த அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதிய வாலி தமிழ் திரையுலகில் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

காலத்தால் அழியாத பாடல்கள்:

ஆண்டுகள் பல கடந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களை எழுதிய பெருமையைப் பெற்றவர் கவிஞர் வாலி.

""ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை....'', "நான் ஆணையிட்டால்...'', ""காற்று வாங்க போனேன்...'', ""சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...'', "'அந்த நாள் ஞாபகம்...'', ""தரைமேல் பிறக்க வைத்தான்'', ""புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்'', ""இறைவா உன் மாளிகையில்...'', போன்ற காலத்தால் அழியாத பாடல்களை எழுதியுள்ளார்.

நூற்றுக்கணக்கான பக்திப் பாடல்களையும் எழுதியுள்ள வாலியின் வரிகளில் டி.எம்.சௌந்தரஜான் பாடிய ""கற்பனை என்றாலும் கற் சிலை என்றாலும்...'' பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

5 தலைமுறைகளைக் கண்டவர்:

எம்.ஜி.ஆர்.-சிவாஜி, ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன், ரஜினிகாந்த்- கமல்ஹாசன், விஜய்-அஜித்-தனுஷ்-சிம்பு வரை ஐந்து தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதி சாதனை படைத்தவர் கவிஞர் வாலி.

இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, டி.ஆர்.பாப்பா, சுதர்சனம், ஜி.கே.வெங்கடேஷ், சங்கர்-கணேஷ், வி.குமார், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா, வித்யாசாகர், டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார், அனிருத் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

சிறுகதைகள், கவிதைகள், உரைநடை என 20-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். "அம்மா', "பொய்க்கால் குதிரை', "நிஜ கோவிந்தம்', "அவதார புருஷன்', "பாண்டவர் பூமி', "கிருஷ்ண விஜயம்' ஆகிய கவிதை நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

"ஹே ராம்', "பார்த்தாலே பரவசம்', "பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ள வாலி, "வடை மாலை' எனும் படத்தை இயக்கியுள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் சாதனை புரிந்த வாலிக்கு, 2007-ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
இதைத் தவிர 1970 (எங்கள் தங்கம்), 1979 (இவர்கள் வித்தியாசமானவர்கள்), 1989 (வருஷம் 16), (அபூர்வ சகோதரர்கள்), 1990 (கேளடி கண்மணி), 2008 (தசாவதாரம்) என ஐந்து முறை சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதுகள் மற்றும் திரைத்துறை விருதுகளை பெற்றிருக்கிறார்.

கடைசிப் பாட்டு:

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கவுள்ள "காவியத்தலைவன்' படத்துக்காக ""கோடாலி முடிச்சுப் போட்டு...'' என்ற பாடலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வாலி எழுதிக் கொடுத்துள்ளார். இப்பாடல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவுள்ளது.

 வாலியின் மனமாற்றத்திற்குக் காரணமாயிருந்த  கண்ணதாசனின் பாடல்...

திரையுலகில் பாடலாசிரியராக தடம் பதிக்க முடியாமல் இருந்த கவிஞர் வாலி, சினிமா ஆசைக்கு விடை கொடுத்துவிட்டு மும்பைக்குச் சென்று தனது சகோதரர் மூலம் வேறு ஏதாவது வேலை தேடலாம் என்கிற முடிவுக்கு வந்தார். பெட்டி, படுக்கையுடன் புறப்படுவதற்கு தயாராக இருந்தபோது அவரை தற்செயலாக சந்திக்க வந்த பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், இயக்குநர் ஸ்ரீதரின் "சுமைதாங்கி' படத்துக்காக - தான் அன்று பாடிய "மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா...' என்கிற கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலை பாடிக் காட்ட, அதில் வரும் ""உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு...'' என்ற வரிகளைக் கேட்ட வாலி மனம் மாறி தனது முடிவை மாற்றிக்கொண்டார். பின் தன்னம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். இதை வாலி பல முறை மேடைகளில் சொல்லியிருக்கிறார்.

பிரபல பாடல் வரிகள்...

"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...', "புதிய வானம் புதிய பூமி...', "ஏமாற்றாதே ஏமாறாதே...', "வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்...', "அத்தை மடி மெத்தையடி...', "கண் போன போக்கிலே கால் போகலாமா...', "காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்...', "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்...', "மன்னிக்க வேண்டுகிறேன்...', "தரை மேல் பிறக்க வைத்தான்...', "நான் மலரோடு தனியாக...', "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...', "மலரே குறிஞ்சி மலரே...', "அம்மா என்றழைக்காத உயிரில்லையே...', "அந்த நாள் ஞாபகம்...', "கல்லை மட்டும் கண்டால்....' ஆகியவை கவிஞர் வாலியின் பிரபல திரைப்பட பாடல் வரிகளாகும்

கவிஞர் வாலி (82) உடல் நலக்குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வாலி. நுரையீரல் தொற்று காரணமாக மார்புப் பகுதியில் சளி படலம் இருந்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானது.

இதையடுத்து அவருக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வார காலத்துக்குப் பின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையிலேயே ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இதயத்தில் ஏற்பட்ட பிரச்னையால், வால்வு பகுதி செயலிழந்ததையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.  தொடர்ந்து சுவாசக் கோளாறு இருந்து வந்ததால், வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. புதன்கிழமை நள்ளிரவு சுய நினைவை இழந்தார். வியாழக்கிழமை மாலை வரை உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மருத்துவ சிகிச்சைகளை உடல் ஏற்க மறுத்ததால், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. வியாழக்கிழமை மாலை 5.10 மணிக்கு வாலியின் உயிர் பிரிந்தது.

கவிஞர் வாலியின் மனைவி ரமணதிலகம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பாலாஜி என்ற ஒரே மகன் உள்ளார்.

வாலியின் உடல் தகனம்

உடல் நலக்குறைவால் நேற்று காலமான கவிஞர் வாலியின் உடல் இன்று மாலை சென்னை பெசன்ட்நகர் மயானத்தில் தகனம் செய்ய்ப்பட்டது. மகன் பாலாஜி வாலி உடலுக்கு தீ மூட்டினார்.முன்னதாக ராஜா அண்ணாமலை புரத்திலிருந்து கவிஞர் வாலியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திரையுலகினர் பலர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.





0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger