மதுரையில் வலைப்பதிவர் திருவிழா- 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை

part 1 photo PARTIMAGE.jpgpart 2 photo PARTIMAGE2.jpgpart 3 photo PARTIMAGE3.jpgpart 4 photo PARTIMAGE4.jpgpart 5 photo PARTIMAGE5.jpgpart6 photo PARTIMAGE56.jpgpart 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpgpart 9 photo PARTIMAGE9.jpgpart 10 photo PARTIMAGE10.jpgpart 11 photo PARTIMAGE11.jpgpart 12 photo PARTIMAGE12.jpgpart 13 photo PARTIMAGE13.jpgpart 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg photo PARTIMAGE16.jpg
தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்.....

மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன...

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

வாருங்கள் வலைப்பதிவர்களே... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால் போதும்...

படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள் தேவைப்பட்டால் :- திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com

நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014 க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்) cheenakay@gmail.com திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.


மேலும் தகவல்கள் / விபரங்கள் அடுத்தப் பதிவில் வெளியாகும். பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்.
வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை
http://www.tamilvaasi.com/2014/08/261014.html

No comments:


Post a Comment









ஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்


தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அறிவுஜீவிகளுக்கு பஞ்சமே கிடையாது. உலக அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், ஏற்படும் மாற்றங்களையும் இயற்கை அறிவுடனும், இணையத்தின் துணையுடனும் விரித்தெழுதி பிரபல பத்திரிகைகளில் இடம் பிடிப்பார்கள். ஆனால் உள்ளூரில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கான காரணங்களையோ, காரணமானவர்களையோ அடையாளம் காட்டி எழுத மாட்டார்கள்.

கானுயிர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் கவலைப்படும் இவர்களுக்கு போக்குவரத்து நெரிசலால், தொழிற் பெருக்க புகையால் ஏழைகள் படும் அவதி தெரியாது. தெரிந்தாலும் எழுதி அதிகார வர்க்கத்தை பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

Environmental Romanticism is much safer than Environmental Activism.

இதற்கு எதிர்நிலையில்-மக்கள் தரப்பில் இருந்து செயல்படுகின்றன ஐங்கரநேசனின் எழுத்துகள். “இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை” என்ற பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட நூல் ஒன்றின் தலைப்பில் முன்னுரையை தொடங்கியிருக்கும் ஆசிரியர் மீதமிருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறார்.
ஈழத்தமிழரான இவர் சென்னையில் முதுநிலை தாவரவியல் படித்துள்ளார். எனினும் இவரது அறிவு தாவரவியலையும் தாண்டி வரலாறு, சமூகவியல், பொருளியல், சட்டம், அரசியல் என அனைத்து திசைகளிலும் பயணிக்கிறது. சூழல் குறித்த விரிந்த பார்வையின் காரணமாக பூவுலகில் உள்ள செல்வங்கள் குறித்தும், அவற்றை சூறையாடும் பன்னாட்டு சதிகள் குறித்தும் தெளிந்த பார்வையோடும், அதை உலகுக்கு உணர்த்தும் இயல்பான மொழியோடும் இந்த நூலை படைத்துள்ளார்.

புவி வெப்பம் குறித்த கட்டுரையுடன் ஆரம்பமாகும் நூல், அடுத்த அத்தியாயத்திலேயே அதற்கு காரணமான அமெரிக்காவை விமர்சனம் செய்கிறது. சூழல் என்பது சமூகம் மட்டுமே சார்ந்த அம்சம் அல்ல என்பதை உணர்த்தும் நோக்கிலும் கட்டுரைகள் உள்ளன. நவீன சமையலறையில் உள்ள பாத்திரங்களே நஞ்சாகும் அவலம், நாகரீக உடையான ஜீன்ஸ் சூழலுக்கு எவ்வாறு எதிரானது, செல்லிட பேசிகள் விளைவிக்கும் அபாயம், கோக்-பெப்சி போன்ற பூச்சி மருந்துகள், பிளாஸ்டிக், அஸ்பெஸ்டாஸ் போன்றவை குறித்து அபாய மணி அடித்து கட்டுரைகள் எச்சரிக்கை செய்கின்றன.

சிலந்தி, வண்ணத்துப்பூச்சி, தவளை, கடற்குதிரை ஆகியவை குறித்த கட்டுரைகள் நமது வாழ்நாளிலேயே பல உயிரினங்கள் அழிவை சந்திக்கும் அவலத்தை சொல்கின்றன. இவற்றின் அழிவு, என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையை கூறவும் தவறவில்லை.

மனிதக் குரங்குகளையும், குரங்கு மனிதர்களையும் அடையாளம் காட்டும் கட்டுரை மிகவும் ரசனையுடனும், ஆழ்ந்த அறிவுடனும் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக சிம்பன்சி, போனபோ வகை குரங்குகளின் பாலியல் வாழ்வை ஒப்பிடுவதன் மூலம் மானுடவியலின் துவக்கத்துக்கான அடிப்படை சுட்டிக்காட்டப்படுகிறது.

ஓரின, ஈரின சேர்க்கை மட்டுமல்லாமல் சுயஇன்பத்திலும் போனபோ வகை குரங்குகள் ஈடுபடுகின்றன என்பது பலருக்கும் புதிய தகவலாக அமையும். ஆனால் இந்த குரங்குகளுக்கு, வேட்டைக்காரர்கள் முதல் நவீன தொழில் நுட்பத்தின் சோதனைச்சாலைகள் வரை ஏற்படும் ஆபத்துகளை விவரிக்கும் போது நவீன உலகின்மீது ஒரு சிறு கோபம் கிளர்ந்தெழுகிறது.

சூழல் என்பது தாவரம், விலங்குகள் போன்ற உயிரினங்கள் மட்டும் சார்ந்தது என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அறிவுச் சொத்துரிமை சட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்படுகிறது. அறிவுச்சொத்துரிமை என்ற மோசடி கருத்தியலுக்கான அடிப்படைகளில் ஒன்றாக இருக்கும் மரபணு மாற்றம் என்ற திரிபுவாத வணிக நுட்பமும் விளக்கமாக சுட்டப்படுகிறது. ஆதி மனிதர்களின் அறிவைக் கவரும் நோக்கில், அவர்களது பாரம்பரியத்தை அழித்தொழிக்கும் சதியாக மொழியை அழிக்கும் போக்கும் கண்டிக்கப்படுகிறது.

இவையெல்லாம் பொதுவாக இருந்த போதும் ஈழம் குறித்த கட்டுரைகள் சிறப்பு கவனத்திற்குரியன. யாழ்ப்பாணத்தில் பாழாகும் கிணறுகள் குறித்த கட்டுரையும், யாழ்ப்பாணம் பாலையாகுமா என்ற கட்டுரையும் தாயகம் மீதான அவருடைய அக்கறையை உணர்த்துகிறது.

சிங்கம் குறித்த கட்டுரையில் கீழ்க்கண்டவாறு வரலாற்று விமர்சனத்தையும் ஆசிரியர் முன் வைக்கிறார்: “சிங்களர்கள் தங்களது தேசியத்தை சிங்கத்துடன் அடையாளப்படுத்த விரும்பியமைக்கு அவர்கள் பின்பற்றுகின்ற பெளத்த மதமும் ஒரு காரணம் ஆகும். அசோகச் சக்கரவர்த்தி புத்த நெறிகளை பரப்பும் நோக்கில் இலங்கைக்கு தனது மகள் சங்கமித்திரையைப் போதிமரக்கிளையுடன் அனுப்பி வைத்த்தாக மகாவம்சம் கூறுகிறது. அசோகச் சக்கரவர்த்தி பெளத்த போதனைகளைப் பதிப்பித்த கல்தூண்களின் தலைகளில் இருந்த சிங்கங்கள் இலங்கையின் சிங்களத் தலைமைகளில் செல்வாக்கு செலுத்தியிருக்கும் என்பது திண்ணம். எவ்வாறாயினும், இலங்கை பல்லினத்துவமுடைய ஒரு தீவு. அதன் தேசியக்கொடியில் பெரும்பான்மையைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கத்தைப் பொறித்தமையானது இன-மத சமத்துவத்தை வேண்டிய அசோகரின் போதனைகளுக்கு முரணானதாகும். அதுவும், சிங்கத்தை வாளேந்த வைத்தமை, கொல்லாமையை வலியுறுத்தும் பெளத்த மதக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமானது. இந்தப் பேரினவாத சிங்கம்தானே, தமிழனைக் கொல்வோம் என்பதன் குறியீடாக நின்று இன்றுவரை தமிழர்களை நரவேட்டையாடி வருகிறது. சிங்களத் தேசியம் கற்பனைக்கு இடங்கொடாது, சிங்களவர்களினதும், தமிழர்களினதும் பூர்விக நிலங்களில், இலங்கைக் காடுகளின் அரசனாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுத்தைப்புலியை இலங்கையின் பொதுவான குறியீடாகத் தேர்வு செய்திருந்தால், தமிழர்கள் தங்களுக்கான தனியான தேசிய அடையாளங்களை தேடவேண்டிய அவசியம் நேர்ந்திராது. இலங்கைத் தீவு இத்தனை இரத்தக்களரிகளையும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியமும் நேராமல் போயிருக்கும்.”

இலங்கைக்கு சென்ற இந்திய ராணுவம் அமைதி ஏற்படுத்துதல் என்ற பெயரில் ஈழத்தமிழர்களின் இறையாண்மையை சூறையாடிய அதேநேரத்தில் “பார்த்தீனியம்” என்ற விஷ களைச்செடியை இலங்கை மண்ணில் குடியேற்றிய அவலமும் இந்தத் தொகுப்பில் சூழல் நோக்கில் விவரிக்கப்பட்டுள்ளது.

சூழல் கேடுகளுக்கு பெருகி வரும் மக்கள் தொகையே காரணம் என்றும், இல்லை என்றும் முதலாளித்துவ-மார்க்சிய சொல்லாடல்கள் தொடர்ந்துவரும் நிலையில், அதற்கான தீர்வை ஆசிரியர் முன்வைக்கிறார்: “வளர்முக நாடுகளின் வள ஆதாரங்களைச் சுரண்டிக் கொழுத்து வாழும் மேற்கு நாடுகள் தங்களைப் போன்ற பணக்கார நாடுகளுக்கே உலகம் சொந்தம் என்று கருதுகின்றன. இதனால் ஏழை நாடுகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தங்களது உணவைத் தட்டிப்பறிக்க மேலதிகமாக வந்து சேர்ந்த “ஒரு வாய்” என்றே பார்க்கின்றன.

ஆனால், ஏழை நாடுகள் பிறப்பைக் கொண்டாட வேண்டியுள்ளது. ஒவ்வொரு குழந்தையின் வருகையும் அன்றாட வருமானத்துக்குக் கைகொடுக்க வந்த “இரண்டு கைகள்” ஆகவே அவை நினைக்கின்றன. இந்த வித்தியாசம் இருக்கும் வரையில் ஏழை நாடுகளில் குடும்பக் கட்டுப்பாடு என்பது யதார்த்தப்பூர்வமானதல்ல மாறாக, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ஏழை நாடுகளின் வாழ்க்கைத் தரத்திலும் கல்வியறிவிலும் ஏற்படும் வளர்ச்சியே, அதன் மக்கள்தொகையை தானாகக் கட்டுக்குள் கொண்டுவரும். இதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள், தங்களின் ஆடம்பரமான மிகை நுகர்வை சற்று குறைத்துக் கொண்டாலே போதுமானது.”

இந்த நூலில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களும்கூட பல கருத்துகளை வலுவாக முன்வைக்கின்றன. தவளைகள் குறித்த கட்டுரையில் வேதி நச்சுகளால் மரபணு குளறுபடி ஏற்பட்டு ஒற்றைக் கண், குறைந்த அல்லது அதிக கால்களுடன் பிறந்து துள்ளித் திரிய இயலாமல் மாண்ட தவளைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. வேதி நச்சுகளே இந்த விளைவுகளை ஏற்படுத்தும்போது தாவர மரபணுவில் மாற்றம் ஏற்படுத்திய உணவை உட்கொள்ளும் மனிதக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்விகள் வயிற்றில் அமிலத்தை சுரக்க வைக்கின்றன.

வணிகமும், பொருள் சேர்த்தலுமே அறமாக இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் கனமான விஷயங்களோடு கூடிய இந்த நூலை அழகுற வடிவமைத்து வெளியிட்ட சாளரம் பதிப்பக உரிமையாளர் வைகறை பாராட்டுதலுக்கு உரியவர்.

படிக்க, பாதுகாக்க, பரிசளிக்க உகந்த இந்த நூலை தமிழ்ச் சமூகம் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சமூக நோக்கமுள்ள மேலும் பல நூல்கள் வெளிவரும்.

வெளியீடு:
சாளரம், 2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை – 600091.
விலை: ரூ 250.00 பக்கங்கள்: 431
 
 
 
 

வெளிநாட்டு நன்கொடை ஏன்?




மத்திய புலனாய்வு துறை சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை என்ற பெயரில் பணம் பெற்று, அவற்றை தவறான முறையிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படும் முறையிலும் பயன்படுத்தி வருகின்றன என்று குற்றம் சொல்லியிருக்கிறது. இதைப்பற்றி பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது எதிர்பார்ப்பையும் கவலையையும் தெரிவித்துள்ளன.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை தடுக்கவும், மக்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கும், அரசின் சில தவறான செயற்பாடுகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதை தவிர்க்கும் நோக்கத்துடன், மத்திய புலனாய்வு துறையின் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்று மத்திய புலனாய்வு துறையின் மீது சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்திய அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டொன்றிற்கு சுமார் 950 கோடி ரூபாய் உதவித் தொகை அளித்து வருகிறது. மேலும், பல தனியார் நிறுவனங்களும். பொது மக்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து வருகின்றன. தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கும் செய்கையை ஊக்குவிப்பதற்காக வருமான வரிச் சலுகையும் மத்திய அரசு அளித்துவருகிறது, 

இத்தகைய நன்கொடைகள் பெறுவது போதாதா? மேலும் வெளி நாட்டிலிருந்து பணம் பெறுவது அவசியமா என்று எழும் மக்களின் சந்தேகத்தை தவிர்க்க இயலாது. இத்தகைய நிலையில், வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசின் புலனாய்வு துறை தொடர்ந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு அடிப்படை இருக்கலாம் என்று பலரும் எண்ணத்தான் செய்கின்றனர். மகாத்மா காந்தி, நேர்மையானவர்கள் கவனமாகவும் செயற்படவேண்டும் என்று கூறினார். இது இன்றைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மிகவும் பொருந்தும்.

இந்தியாவில் தற்போது சுமார் 20 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளதாக மத்திய புலனாய்வு துறை கூறியுள்ளது. அதாவது, 600 நபர்களுக்கு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற கணக்கில் நாடெங்கும் பரந்து, விரிந்து மூலை முடுக்குகளிலெல்லாம் நிறைந்துள்ளன, அவற்றில், சுமார் 44.000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற, மத்திய அரசின் அனுமதியை பெற்றுள்ளன. சுமார் 22.000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து பல கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் வெளி நாட்டுலிருந்து பெற்று வருகின்றன, 

கடந்த 2011 - 12ஆம் ஆண்டில் மாத்திரம். வெளிநாட்டிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் ரு 11,250 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவிலிருந்து மாத்திரம் சுமார் 3,500 கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது, நாடெங்கிலும் பரவலாக பணிசெய்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை, மத்திய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கமோ தகுந்த முறையில் கண்காணிக்கவில்லை என்பதே உண்மை. 

உதாரணமாக, மாநில அரசின் அனுமதி பெறாமலே பல சிறார் பாதுகாப்பு அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன என்ற நிலை, விபத்துகள் நடக்கும் போதுதான் தெரிய வருகின்றன. சமீபத்தில் பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட துர்பாக்கிய சம்பவம், அரசு அங்கிகாரம் பெறாமல் நடந்து வந்த சிறுவர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்டதே என்பதை நினைவுகொள்ள வேண்டும்.

பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நல்ல முறையில் செயற்பட்டு வருகின்றன என்ற போதிலும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் சந்தேகம் எழுப்பும் நிலையிலேயே உள்ளன. அவை தங்களது வரவு, செலவு விவரங்களை சரிவர வெளிப்படுத்துவதில்லை.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தும் பலர் தங்களுக்கு வேறு எந்த விதமான வருமானம் பெற்றுத்தரும் வேலையோ அல்லது தொழிலோ இல்லாத நிலையிலும் செல்வச் செழிப்புடனும் வசதியுள்ள அலுவலகங்களையும் கொண்டு செயற்படுவது, அடிக்கடி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயணம் செய்வது, அவர்களது செய்றபாடுகளை பற்றி சந்தேகம் எழ வழி வகுக்கின்றன. இவர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் நன்கொடை தொகையை தவறாக சொந்த நலனுக்கே ஒரளவு செலவு செய்கிறார்களோ என்ற ஐயப்பாடு எழுகிறது.
 
பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆடம்பரமாக கூட்டங்களையும் விழாக்களையும் நடத்தும்போது இத்தகைய ஐயப்பாடு மேலும் வலுவடைகிறது. பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், நன்கொடை பெறுவதற்காகவே ஆலோசகர்களையும் தரகர்களையும் நாடுவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பல ஏற்றத்தாழ்வுகளும் லஞ்ச ஊழல்களும் மலிந்து காணப்படும் இன்றைய சூழ்நிலையில். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு பாடுபட பல வாய்ப்புகளும் தேவைகளும் கூடிக்கொண்டு வருகின்றன. நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணிகள் மிகவும் தேவை.

அதே சமயத்தில். தன்னலமாக செயற்படுவோரையும் அரசியல், மதம், ஜாதி போன்ற அமைப்புகளின் சார்பில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் செயற்படுவோரையும், வெளிநாட்டு நிறுவனங்களின் கை கூலியாக செயல்படுவோரையும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளிலிருந்து விலக்கி வைப்பது மிகவும் அவசியம். இந்த நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வரவு செலவுகளும், செயற்பாடுகளும் மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கொண்டு வருவதும் மிகவும் அவசியம். மேலும், வெளிநாட்டிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நன்கொடை பெறக்கூடாது என்று மத்திய அரசு சட்டம் இயற்றினால், அது வரவேற்கத் தக்கதே.

மத்திய புலனாய்வு துறை சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை என்ற பெயரில் பணம் பெற்று, அவற்றை தவறான முறையிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படும் முறையிலும் பயன்படுத்தி வருகின்றன என்று குற்றம் சொல்லியிருக்கிறது. இதைப்பற்றி பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது எதிர்பார்ப்பையும் கவலையையும் தெரிவித்துள்ளன.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை தடுக்கவும், மக்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கும், அரசின் சில தவறான செயற்பாடுகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதை தவிர்க்கும் நோக்கத்துடன், மத்திய புலனாய்வு துறையின் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்று மத்திய புலனாய்வு துறையின் மீது சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்திய அரசாங்கம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டொன்றிற்கு சுமார் 950 கோடி ரூபாய் உதவித் தொகை அளித்து வருகிறது. மேலும், பல தனியார் நிறுவனங்களும். பொது மக்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து வருகின்றன. தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கும் செய்கையை ஊக்குவிப்பதற்காக வருமான வரிச் சலுகையும் மத்திய அரசு அளித்துவருகிறது, இத்தகைய நன்கொடைகள் பெறுவது போதாதா? மேலும் வெளி நாட்டிலிருந்து பணம் பெறுவது அவசியமா என்று எழும் மக்களின் சந்தேகத்தை தவிர்க்க இயலாது. 

இத்தகைய நிலையில், வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசின் புலனாய்வு துறை தொடர்ந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு அடிப்படை இருக்கலாம் என்று பலரும் எண்ணத்தான் செய்கின்றனர். மகாத்மா காந்தி, நேர்மையானவர்கள் கவனமாகவும் செயற்படவேண்டும் என்று கூறினார். இது இன்றைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மிகவும் பொருந்தும்.

இந்தியாவில் தற்போது சுமார் 20 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளதாக மத்திய புலனாய்வு துறை கூறியுள்ளது. அதாவது, 600 நபர்களுக்கு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற கணக்கில் நாடெங்கும் பரந்து, விரிந்து மூலை முடுக்குகளிலெல்லாம் நிறைந்துள்ளன, அவற்றில், சுமார் 44.000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற, மத்திய அரசின் அனுமதியை பெற்றுள்ளன.

 சுமார் 22.000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து பல கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் வெளி நாட்டுலிருந்து பெற்று வருகின்றன, கடந்த 2011 - 12ஆம் ஆண்டில் மாத்திரம். வெளிநாட்டிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு சுமார் ரு 11,250 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவிலிருந்து மாத்திரம் சுமார் 3,500 கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது, 

நாடெங்கிலும் பரவலாக பணிசெய்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை, மத்திய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கமோ தகுந்த முறையில் கண்காணிக்கவில்லை என்பதே உண்மை. உதாரணமாக, மாநில அரசின் அனுமதி பெறாமலே பல சிறார் பாதுகாப்பு அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன என்ற நிலை, விபத்துகள் நடக்கும் போதுதான் தெரிய வருகின்றன. 

சமீபத்தில் பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட துர்பாக்கிய சம்பவம், அரசு அங்கிகாரம் பெறாமல் நடந்து வந்த சிறுவர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்டதே என்பதை நினைவுகொள்ள வேண்டும்.

பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நல்ல முறையில் செயற்பட்டு வருகின்றன என்ற போதிலும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் சந்தேகம் எழுப்பும் நிலையிலேயே உள்ளன. அவை தங்களது வரவு, செலவு விவரங்களை சரிவர வெளிப்படுத்துவதில்லை.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தும் பலர் தங்களுக்கு வேறு எந்த விதமான வருமானம் பெற்றுத்தரும் வேலையோ அல்லது தொழிலோ இல்லாத நிலையிலும் செல்வச் செழிப்புடனும் வசதியுள்ள அலுவலகங்களையும் கொண்டு செயற்படுவது, அடிக்கடி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயணம் செய்வது, அவர்களது செய்றபாடுகளை பற்றி சந்தேகம் எழ வழி வகுக்கின்றன. இவர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் நன்கொடை தொகையை தவறாக சொந்த நலனுக்கே ஒரளவு செலவு செய்கிறார்களோ என்ற ஐயப்பாடு எழுகிறது.
 
பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆடம்பரமாக கூட்டங்களையும் விழாக்களையும் நடத்தும்போது இத்தகைய ஐயப்பாடு மேலும் வலுவடைகிறது. பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், நன்கொடை பெறுவதற்காகவே ஆலோசகர்களையும் தரகர்களையும் நாடுவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பல ஏற்றத்தாழ்வுகளும் லஞ்ச ஊழல்களும் மலிந்து காணப்படும் இன்றைய சூழ்நிலையில். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு பாடுபட பல வாய்ப்புகளும் தேவைகளும் கூடிக்கொண்டு வருகின்றன. நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணிகள் மிகவும் தேவை.

அதே சமயத்தில். தன்னலமாக செயற்படுவோரையும் அரசியல், மதம், ஜாதி போன்ற அமைப்புகளின் சார்பில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் செயற்படுவோரையும், வெளிநாட்டு நிறுவனங்களின் கை கூலியாக செயல்படுவோரையும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளிலிருந்து விலக்கி வைப்பது மிகவும் அவசியம். இந்த நிலையில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வரவு செலவுகளும், செயற்பாடுகளும் மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கொண்டு வருவதும் மிகவும் அவசியம். மேலும், வெளிநாட்டிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நன்கொடை பெறக்கூடாது என்று மத்திய அரசு சட்டம் இயற்றினால், அது வரவேற்கத் தக்கதே. 

எஸ்.எஸ். வெங்கட்ராமன், கருத்துக்களம், தினமணி

சக்கர நாற்காலியில் உட்கார்ந்ததால் சமூக சேவகனாக இருக்க முடிகிறது- விபத்தால் திசை மாறிய வெங்கடபூபதியின் வெற்றிப் பயணம்



‘ஓடிக்கொண்டே இருந்திருந்தால் என்னை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்திருப்பேன்” என்கிறார் வெங்கடபூபதி. 

தேனியை அடுத்த வடபுதுப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடபூபதி. டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்தார். தான் நினைத்ததற்கு மாறாக ராணுவ முகாம் இருந்தததால், ஏழே வருடத்தில் விருப்ப ஓய்வில் வெளியில் வந்து விட்டார். 

ராணுவத்தில் இருக்கும்போதே எம்.ஏ., சமூகவியல் முடித்திருந்த வெங்கடபூபதி, வெளியில் வந்ததும் சமூகத்தை பற்றி சிந்திக்கத் தொடங்கினார். ஆனால், இயற்கை அவரது வாழ்க்கையில் வேறுமாதிரி விளையாடிவிட்டது. ஆனாலும், தான் நினைத்ததை கொஞ்சம் கொஞ்சமாக சாதித்துக் கொண்டிருக்கிறார். அதுகுறித்து அவரே விளக்குகிறார்.. 

1993-ல் ராணுவத்தில் இருந்து வந்ததுமே இயற்கை விவசாயத்தை கையில் எடுத்தேன். எங்கள் கிராமத்தில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ‘உழவர் மன்றம்’என்ற அமைப்பை உருவாக்கினேன். இயற்கை விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு வங்கிக் கடன்களை வாங்கிக் கொடுத்தேன். 

கிராமத்து மக்கள் ஆயுள் காப்பீடு குறித்து அவ்வளவாய் அக்கறை இல்லாமல் இருந்தார்கள். அதனால், நானே எல்ஐசி முகவராகி, பலரை ஆயுள் காப்பீடு செய்ய வைத்தேன். இறப்புக்குப் பிறகும் குடும்பத்தை வாழவைக்க முடியும் என அவர்களுக்கு புரியவைத்தேன். 

என் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும் என்று எனக்குள் நிறைய கனவுகளை வைத்திருந்தேன். இடையில் ஏற்பட்ட ஒரு விபத்து, என்னை வேறு திசையில் பயணிக்க வைத்துவிட்டது. 2009-ல் சாலை விபத்தில் எனக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. குணப்படுத்த முடியும், முடியாது என்று சொல்லாமலேயே 6 மாத காலம் சிகிச்சையளித்து 15 லட்சத்தைக் கரைத்துவிட்டனர். கடைசியில், இடுப்புக்குக் கீழே செயலற்ற நிலையில் சக்கர நாற்காலியில் வீட்டுக்கு அனுப்பினர். 

வீடுவரை மனைவி என்று கண்ணதாசன் பாடினார். ஆனால், எனக்கு விபத்துவரைதான் மனைவி. இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்ட என்னோடு வாழ என் மனைவிக்கு இஷ்டமில்லை. விவாகரத்து வாங்கிக் கொண்டு போய்விட்டார். ‘மாற்றுத் திறனாளி ஒருவரால் சிறுவனுக்கு பாதுகாப்பான வாழ்க்கையைத் தரமுடியாது’என்று சொல்லி ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது மகனையும் பிரித்துவிட்டார்கள். அந்த மன அழுத்தத்தில் தற்கொலை முடிவுக்கே போய்விட்டேன். 

அப்போதுதான் எனது குருநாதரான அமர்சேவா சங்கத்தின் ராமகிருஷ்ணன், ‘உன்னால் முடிக்கப்பட வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது’ என்று சொல்லி எனக்கு இன்னொரு வழியைக் காட்டினார். 

குருநாதர் பெயரிலேயே ராம்ஜி டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி, மாற்றுத் திறனாளிகளுக்கு மனதளவில் உள்ள பிரச்சினைகளை கண்டுபிடித்து கவுன்சலிங் கொடுத்தேன். அத்துடன் அவர்களுக்கு தன்னம்பிக்கை வருவதற்காக கம்ப்யூட்டர், தையல், செல்போன் சர்வீஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்தேன்.
அருகிலுள்ள பாலிடெக்னிக் கல்லூரி உதவியுடன் இதுவரை 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி கொடுத்திருக்கிறோம். விவசாயத்தின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. அதை வைத்தும் நண்பர்கள் துணையோடும் எங்கள் சேவை தொடர்கிறது. 

என்னை கவனிக்க எனது 77 வயது அம்மா இருக்கிறார். என்னைப் போல் தண்டுவடம் பாதித்த மாற்றுத் திறனாளிகள் பலர் கவனிக்க ஆளில்லாமல் இருக்கிறார்கள். முதல்கட்டமாக இந்த ஆண்டு அவர்களில் நான்கு பேரை எங்களது பொறுப்பில் தங்கவைத்து அவருக்கான உதவிகளை வழங்கப் போகிறோம். 

ஓடிக்கொண்டே இருந்திருந்தால் என்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்திருப்பேன். சக்கர நாற்காலியில் உட்கார்ந்ததால் ஒரு சமூக சேவகனாக இருக்க முடிகிறது. மரம் வைத்தவன் எனக்கும் தண்ணீர் ஊற்றுகிறான் என பூரிப்புடன் சொன்னார் வெங்கடபூபதி. 

தி இந்து

இயலாதவர்களுக்கும் இயற்கைக்கும் சேவை: கோவை கால்டாக்ஸி டிரைவரின் கருணை நிறைந்த மனம்

நிழல் மைய அமைப்பாளர்களுடன் முருகன். 
(நிற்பவர்களில் இடமிருந்து நான்காவது.) 

 மரத்தை வெட்டாதீர்கள் என்று வெறும் வார்த்தைகளால் சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, முடிந்தவரை மரக் கன்றுகளை நட்டுப் பழகுங்கள்’என்கிறார் கால்டாக்ஸி டிரைவரான முருகன். கோவை பகுதியில் இவர் நட்டு வளர்த்திருக்கும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பத்தாயிரம். 

சென்னை சூளைமேடு ஏரியாவைச் சேர்ந்தவர் முருகன். 1992-ல் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்தவர், குடிகாரத் தந்தையின் இம்சை தாங்காமல் வீட்டிலிருந்து 300 ரூபாயை எடுத்துக் கொண்டு கிளம்பினார். கண்காணாத் தூரத்தில் போய் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் முருகனுக்குள் அப்போது இருந்த எண்ணம். கையில் இருந்த காசெல்லாம் கரைந்து முடிந்தபோது, கோவை சிறுமுகையில் ஒரு பிள்ளையார் கோயிலில் படுத்துக் கிடந்தார் முருகன். பிறகு என்ன நடந்தது? அவரே விவரிக்கிறார். 

‘‘பிள்ளையார் கோயிலில் அந்த இரவில் என்னைச் சுற்றி ஆதரவற்ற வயதான பெரியவர்கள் சிலரும் படுத்திருந்தனர். அப்போது லேசாக மழை தூர ஆரம்பித்தது. அங்கிருந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவர், என்னுடைய கதையைக் கேட்டு விட்டு என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்த திண்ணையில் படுக்க வைத்தார். 

அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. வயதான இந்தப் பெரியவர்களுக்கு எல்லாம் ஒரு வாழ்க்கை இருக்கும்போது, பதினாறு வயதில் நாம் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். 

பொழுது விடிந்ததும், அங்கிருந்தவர்கள் 500 ரூபாய் வசூல் செய்து கொடுத்து என்னை சென்னைக்கே போகச் சொன்னார்கள். ‘எனக்கு பணம் வேண்டாம். ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்கள்’ என்றேன். ஓட்டலில் சப்ளையர் வேலை வாங்கிக் கொடுத்தார்கள். மூன்று மாதம், ஒரே பேன்ட், சட்டையைப் போட்டுக் கொண்டு வேலை பார்த்தேன். அதன்பிறகு கூரியர் சர்வீஸ், பேப்பர் பாய், லாட்டரிச் சீட்டு, ஊதுபத்தி சேல்ஸ் இதெல்லாம் பார்த்து விட்டு ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டேன். 

ஆட்டோ ஓட்டியதும் மாதம் 3 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. அதில் ஒரு பகுதியை, இயலாதவர்களுக்கு சோறுபோட ஒதுக்கினேன். வாரத்தில் ஒருநாள் வீட்டில் நானே சமைத்து வீதியோரத்து ஆதரவற்றோர் 50 பேருக்கு மதிய உணவு கொடுக்க ஆரம்பித்தேன்.

 நான் ஆட்டோ ஓட்டிய ஹார்டுவேர்ஸ் கம்பெனி முதலாளி சபீர் இமானியிடம் ‘இயலாதவங்க ளுக்கு உதவி பண்றதுக்காக இன்னும் அதிகமா வேலை செய்யணும்னு நினைக்கிறேன்’னு சொன்னேன். அவர், மேலும் மூன்று குட்டியானை வண்டிகளை வாங்கிக் கொடுத்து ‘இதில் கிடைக்கிற வருமானத்தையும் ஆதரவற்றோருக்கு சேவை செய்ய வெச்சுக்கப்பா’ என்றார். 

அத்துடன் குழிவெட்டும் மெஷின் ஒன்றையும் வாங்கிக் கொடுத்தவர், ‘கோவையில் 25 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டுட்டா இந்த மெஷின் உனக்கே சொந்தம்’ என்று சொன்னார். மளமளன்னு மரக் கன்றுகளை வைக்க ஆரம்பிச்சேன். எனக்கு ஜிம்முக்குப் போகும் பழக்கம் உண்டு. அங்கு வரும் மது அருந்தாத, புகை பிடிக்காத இளைஞர்கள் சிலரை நண்பர்களாக்கிக் கொண்டு ‘நிழல் மையம்’ என்ற அமைப்பை உருவாக்கினேன். இப்போது, கால்டாக்ஸி ஓட்டுகிறேன். இதில் கிடைக்கும் வருமானத்தில், ஞாயிறுதோறும் கோவையில் 11 ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள 600 பேருக்கு மதிய உணவு கொடுக்கிறேன். 

இந்த ஜீவன்களுக்கு இன்னும் நிறைய உதவ வேண்டும் என்பதற்காக வருஷம் 365 நாளும் உழைக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவைப் பகுதியில் 32,200 மரக் கன்றுகளை இலவசமாக வழங்கி இருக்கிறோம். நாங்களே 15 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டு, அதில் பத்தாயிரம் கன்றுகள் நல்ல நிலையில் வளர்ந்து நிற்கின்றன. இதுமட்டுமில்லாமல், கோவையை பிச்சைக்காரர்கள் இல்லாத மாநகராக மாற்ற வேண்டும் என்பதற்காக 5 ஆண்டுகளாக போராடி வருகிறோம். 

எங்களது முயற்சியால்தான் கோவையில் பிச்சைக்காரர்களுக்காக அரசுத் தரப்பில் ஒரு காப்பகம் தொடங்கப்பட்டது. இடையிடையே, ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்கிறோம். பெரிய அளவில் வருமானம் இல்லாவிட்டாலும் ஏதோ, இருக்கின்ற வருமானத்தை வைத்து இயலாதவர்களுக்கும் இயற்கைக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறோம்…’’ என்று சொல்லி முடித்தார் முருகன். 

தி இந்து

தமிழ் மண் தவழா மோடி அலை

மோடி அலை! இந்தியாவில் வீசியதா? இல்லையா? இது இந்துத்துவ அலை என்றால், இந்தப் பேராபத்தைத் தடுப்பதெப்படி? தமிழகத்தில் வீசியது என்ன அலை? திராவிடம் வளர்ந்த தமிழ் மண்ணில் பாஜக வெல்லுமா? எனப் பல கேள்விகளும், இதன் தொடர்விளைவாகப் பல விவாதங்களும் விளக்கங்களும் எழுந்த வண்ணமுள்ளன.

Modi 330மோடி என்னும் பெரு மனிதரின் அலைதான் பாஜகவை இந்தியக் கொடுமுடியில் அமர்த்தியுள்ளதாகப் பெருமைப்படுகிறது சங்கக் குடும்பம். இல்லை, இல்லை...

மோடி என்னும் வெற்று மனிதரை பூதாகரப்படுத்திக் காட்டுவதில் இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்று விட்டதாகச் சொல்கிறது இடதுசாரிக் குடும்பம்.

இது மோடி செய்த மாயம் என்கிறார்கள் வளர்ச்சி பஜனை பாடுவோர். இது வெறும் ஊடகத் தந்திரம் என்கிறார்கள் மதச்சார்பின்மை மந்திரம் ஓதுவோர்.
இரு தரப்பிலும் வந்து விழும் வாதங்களில் எது உண்மை? எதுவும் முழு உண்மையில்லை என்பதே உண்மை.

பாஜகவின் வெற்றி கார்ப்பரேட்டுகள் நடத்திக் காட்டிய வெற்றி எனக் கவலைப்படுகிறார் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் காம்ரேடு சி. மகேந்திரன். இது கெப்பல்ஸ் பாணி பிரச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றி என்கிறார் ஆம் ஆத்மி ஞாநி. இது இந்தியாவுக்கே பெரிய ஆபத்து என்கிறார் காங்கிரசின் மணிசங்கர் ஐயர். இப்படி இந்தியப் பாணி மதச்சார்பின்மை பேசும் அனைவருமே மோடியை இந்து வெறியர் என்றும், இனப்படுகொலையாளர் என்றும் அடையாளப்படுத்துகின்றனர்.

இவர்கள் கூற்றுப்படி, இந்திய ஊடகங்கள் ஓர் இந்து வெறிக் கொலைகாரரை வளர்ச்சி நாயகனாகக் காட்டி வெற்றி கண்டு விட்டனவாம். அப்படியானால் ராகுல், காரத், பரதன், கெஜ்ரிவால் என அனாத ரட்சகர்கள் திருக்காட்சி அளித்து நிற்க, ஏதுமறியா அப்பாவி மக்கள்தான் ஊடக வித்தையில் மயங்கி மோடியிடம் ஏமாந்து போய் விட்டதாக நாம் புரிந்து கொள்ளலாமா?

இந்தியம் என்பதே இந்துத்துவந்தான். இந்தியத்தை ஆதரிப்பதும் இந்துத்துவத்தை ஆதரிப்பதும் ஒன்றே. ஆர்எஸ்எஸ் கூட்டம் சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தும் இக்கருத்தைத்தான் இதர பாரதப் புதல்வர்கள் தங்கள் செயல்களில் வெளிப்படுத்துகின்றனர். குசராத்தில் இசுலாமியர்களைக் கொன்ற மோடியைப் புகழ்வதையே பாவமாகக் கருதும் இடதுசாரிகள் அமிர்தசரசிலும் தில்லியிலும் சீக்கியர்களைக் கொன்று குவித்த காங்கிரசைத் தாங்கிப் பிடிப்பதையே பெரும் புண்ணியமாகக் கருதவில்லையா என்ன?

2002 குசராத் படுகொலைகளை இந்துத்துவத்தின் கோர வெளிப்பாடாகச் சரியாகவே சித்திரிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியக் கட்சிகள் அனைத்தும் இந்துத்துவம் தலைவிரித்து ஊழிக் கூத்தாடும் காஷ்மீரத்தில் செய்வதென்ன? அவை உள்ளபடியே காஷ்மீரத்து இசுலாமிய நரவேட்டையில் ஒன்றையொன்று முந்திக் கொள்வதில் அல்லவா போட்டி போடுகின்றன? 

நேரு உறுதியளித்த காஷ்மீர் கருத்து வாக்கெடுப்புப் பிரகடனங்களைக் கிழித்தெறிந்து இசுலாமியப் பெரும்பான்மையினரை இந்திய ஓர்மை என்னும் இந்துத்துவச் சகதியில் மூழ்கடிக்கத் துடிப்பதில் இவர்களுக்குள் வேறுபாடு உண்டா? எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கடுகளவும் சகித்துக் கொள்ள மாட்டோம் எனத் தேர்தல் அறிக்கையில் இந்துத்துவம் கக்குகிறது 

நேற்று முளைத்த ஆம் ஆத்மி. அவன் எல்லையை அவன் விருப்பப்படி தாண்டுவதையே பயங்கரவாதம் என வர்ணிக்கும் இவர்கள் அல்லவா உண்மைப் பயங்கரவாதிகள்? ராகுல், காரத், பரதன், கெஜ்ரிவால் கூட்டத்துக்கும் மோடிக்கும் என்ன வித்தியாசம் - ஒற்றைத் தாடி தவிர.

உலக வானிலையில் கட்ரினா, சாண்டி, தானே எனப் பல பெயர்களில் புயல்கள் வீசுவது போல், இந்திய அரசியலில் இந்திராவின் நெருக்கடி நிலைக்கு எதிரான ஜனதா அலை, ராஜீவின் போஃபர்சுக்கு எதிரான வி. பி. சிங் அலை, வாஜ்பாய் புளுகிய ஒளிரும் இந்தியாவுக்கு எதிரான காங்கிரஸ் அலை எனப் பல அலைகள் வீசியதுண்டு. காங்கிரசின் கடைந்தெடுத்த ஊழல் ஆட்சிக்கு எதிரான இந்தப் புயலை இன்றைய இந்திய அரசியல் மோடி அலை என அழைக்கிறது, அவ்வளவே! எல்லாம் சாரத்தில் இந்துத்துவ அலைகளே! உலகமய, தாராளமய ஆதரவு அலைகளே!

இந்தியக் கட்சிகள் அனைத்தும் வெவ்வேறு அணிகள் அல்ல, அவை உள்ளபடியே ஒரே இந்துத்துவ அணியில் கைக்கோத்து நிற்பதை இன்னும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன தமிழகத் தேர்தல் முடிவுகள்!

மோடி அலை என்றல்ல, காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ, ஆம் ஆத்மி என எந்த இந்துத்துவ அலையும் வீசாது தடுத்து நிறுத்தியது பெரியார் பண்படுத்தித் தந்த தமிழ் மண்.

ஆரிய சமற்கிருதக் குடும்பத்தின் இந்தியைத் திணிப்பதே இந்தியம் என்றால், அதனை எதிர்ப்பதே சரியான இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கை, சாரத்தில் உண்மையான இடதுசாரிக் கொள்கை. அந்த இந்தியை ஆதரித்த காங்கிரசுக்குத் தமிழ் மண் 1967இல் மரண அடி கொடுத்தது என்றால், இன்று அந்தக் காங்கிரசையும், இந்தித் திணிப்பு எதிர்ப்பு உட்பட தெளிவான மொழிக் கொள்கை ஏதுமில்லாத இடதுசாரிகளையும் வெறும் உதிரிக் கட்சிகளாக்கி, அவர்கள் பாஷையில் சொன்னால் ஃபிரிஞ்ச் க்ரூப்பாக்கி, அவற்றின் சவப் பெட்டிகளுக்குக் கடைசி ஆணிகளையும் அறைந்து விட்டது.

இந்தித் திணிப்பு என்றல்ல, தமிழீழ விடுதலை, காவிரிச் சிக்கல், மூவர்த் தூக்கு எனத் தமிழகத்தின் அனைத்து உயிர்நாடிச் சிக்கல்களிலும் தமிழர்களுக்கு இரண்டகம் செய்து வந்ததால் காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் கிடைத்த இறுதி அடியிது.

காஷ்மீரத்துக்குச் சிறப்புத் தகுநிலை அளிக்கும் 370 சட்டப் பிரிவை நீக்கச் சொல்லும் பாஜகவின் கொள்கையை இனவெறியாகக் காட்டுவதில் இந்தியக் கட்சிகள் எதற்கும் முரண்பாடில்லை என்பது போல்தான் தெரிகிறது. ஆனால் 370இன்படி காஷ்மீரத்தில் அயல் மாநிலத்தார் நிலம் வாங்குவதைத் தடுக்கும் வலிமை தமிழகத்துக்கும் வேண்டும் எனத் தமிழ்த் தேசியர்கள் கேட்டால் போதும், உடனே காங்கிரஸ் போன்ற வலதுசாரிகளும், ஆம் ஆத்மி போன்ற நடுசாரிகளும், மார்க்சிஸ்டு போன்ற இடதுசாரிகளும், ஏன், மகஇக போன்ற தீவிர இடதுசாரிகளுங்கூட பாரத ஒற்றுமையே கெட்டு விட்டதென வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கின்றனர். தமிழகச் சொத்துரிமை தமிழர்களுக்கு வேண்டும் என்ற சனநாயகக் குரலை இனவாதம் எனத் தூற்றுகின்றனர். அதற்காகப் போராடுவோரைப் பிரிவினைவாதிகள் என்றும் பாசிஸ்டுகள் என்றும் பழிக்கின்றனர். பாரதக் கட்சிகளின் இந்த அநீதிப் பார்வைதான் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய நில மீட்புப் போராட்டத்தை எதிர்ப்பது வரை நீள்கிறது.

தமிழகத்துக்கு அனைத்து வகையிலும் பகையாகச் செயல்பட்ட காங்கிரஸ், இடதுசாரிகளின் தேர்தல் தோல்வியில் குளிர் காயலாம் எனப் படபடத்த இந்துத்துவக் கூட்டத்தினர், குறிப்பாகப் பெரியாரை எதிர்க்கும் ஒரு கட்சி தமிழக ஆட்சியைப் பிடிக்காதா என்று அரை நூற்றாண்டுக்கு மேலாகக் கனவு கண்டு வந்த சோ கூட்டத்தினர் மோடியை வாராது வந்த மாமணியாகக் கருதினர். சில தமிழகக் கட்சிகளின் தயவில் வானவில் கூட்டணி அமைத்து விட்டதாகவும், இது பெரும் மோடி அலையாக எழுந்து திராவிடக் கட்சிகளைச் சாய்த்துக் காட்டும் எனவும் கொக்கரித்தனர். இது பெரியார் பிறந்த மண் என்று பேச இனி ஆளிருக்காது என இந்துத்துவக் கனா கண்டனர். மோடி அலையால் பாஜக மட்டுமே 20 விழுக்காடு வாக்குகளை அறுவடை செய்யும் எனக் கதை அளந்தனர். ஆனால் மொத்தக் கூட்டணியும் 15 விழுக்காட்டைத் தாண்டவில்லை!

சிற்சில தொகுதிகளில் பாஜக ஓரளவுக்கு நல்ல வாக்கு அறுவடை செய்திருப்பது உண்மைதான். ஆனால் தமிழீழத்துக்கு, மீனவர்களுக்கு, எழுவர் விடுதலைக்கு எதிரான காங்கிரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதாகக் கூறித்தான் தமிழக பாஜகவால் இந்த நிலையைக் கூட அடைய முடிந்துள்ளது. ஆனால் இந்திய பாஜகவின் உண்மையான ஈழ எதிர்ப்பு முகம் வெளிப்படும் போது காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் ஏற்பட்ட நிலையே பாஜகவுக்கும் ஏற்படும்.

காங்கிரசின் அனைத்துத் தமிழ் விரோத நடவடிக்கைகளிலும் பங்கு வகித்த திமுக தனது குற்றங்களிலிருந்து கடைசி நேரத்தில் சாமர்த்தியமாகக் கழன்று கொள்ள நினைத்தாலும், மக்கள் அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

இந்தத் தேர்தலில் பெரு வெற்றி கண்டுள்ள அதிமுகவின் தலைவியான ஜெயலலிதாவுக்கு உண்மை உளக்கிடக்கை இந்துத்துவமாக இருக்கலாம். ஆனால் அவர் தடம் மாறும் போதெல்லாம் வாக்கு வங்கி அரசியல் அவரைச் சமூகநீதிக்கும் தமிழுணர்வுக்கும் ஆதரவாகத் தள்ளியதை வரலாறு படம்பிடித்துக் காட்டுகிறது. வி. பி. சிங்கின் மண்டல் குழு நிலைப்பாட்டை எதிர்த்த ஜெயலலிதாதான் பின்னர் தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகத் தனிச் சட்டம் இயற்றினார். தமிழீழ விடுதலையை அன்றாடம் எதிர்த்து வந்த ஜெயலலிதாதான் தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கையின் மீதான பொருளாதாரத் தடை கேட்டும், தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு கோரியும், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை ஆட்டக்காரர்களை நீக்க வேண்டியும் தீர்மானங்கள் இயற்றினார். தூக்கிலிருந்து கலைஞரால் நளினி ஒருவர் விடுவிக்கப்பட்டதையே எதிர்த்தவர்தான் இன்று எழுவர் விடுதலைக்கும் குரல் கொடுக்கிறார்.

இந்த அனைத்துச் சிக்கல்களிலும் அதிமுக, திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்டு உள்ளிட்ட இந்தியக் கட்சிகளும் அடிப்படையில் பிளவுபட்டு நிற்பதைத் தெளிவாய்க் காணலாம்.

மேம்போக்காகப் பார்த்தால், தமிழகத்தில் பெரியாருக்கு எதிரான பாஜக கொஞ்சம் கொஞ்சம் குருத்து விடுவதாகத் தெரிந்தாலும், அது பெரியார், அண்ணா மொழியில் பேசித்தான் மக்களைச் சந்திக்கிறது, வாக்குக் கேட்கிறது. "நமஸ்காரம்" என அக்கிரகாரத் தமிழில் பேசி வந்த காங்கிரஸ்காரர்களை, இன்று சோ தொடங்கி பெரியாரை அநாகரிக வார்த்தைகளில் இழிவுபடுத்தி வரும் எச். ராஜா வரை, ஏன், குசராத்தி மோடிக்குங்கூட "வணக்கம்" எனப் பேசக் கற்றுக் கொடுத்தது, அல்லது பேச வைத்தது திராவிடமும் அதன் தலைவர்களுமே! அக்கிராசனர், அபேட்சகர் என மணிப்பிரவாளத்தில் நடந்து வந்த அவர்களின் தேர்தல் பரப்புரைகளில் தலைவர், வேட்பாளர் ஆகிய அழகு தமிழ்ச் சொற்களைத் தவழச் செய்ததும் திராவிடக் கட்சிகளே!

பாஜகவினர் உண்மையிலேயே பெரியாரை எதிர்த்துத் தமிழக ஆட்சிக் கட்டிலேற விரும்பினால், பேசிப் பார்க்கட்டுமே: "எல்லாருக்கும் நமஸ்காரம்! பாஜகவின் இந்திய அக்கிராசனர் ராஜ்நாத்சிங், தமிழக அக்கிராசனர் பொன்னார் ஆகியோர் ஆசிர்வதித்த எங்களின் மதறாஸ் அபேட்சகர்களுக்கு ஓட் பண்ணுங்கோ! நாங்க மத்திய சர்க்காருக்கு வந்தா, எங்க ஆர்எஸ்எஸ் அக்கிராசனர் ஹெட்கேவர் உபன்யாசத்தின்படி, சமஸ்கிருதத்தை பாரத பாஷா ஆக்குவோம்! பாரதத்தை பாஷைக்கு ஒண்ணா பிரிக்க மாட்டோம்! கோ மாமிசம் சாப்பிட்டா தேசப் பிரஷ்டம் பண்ணுவோம்! வருணாசிரம தர்மத்தை நிந்திக்கும் நாஸ்திகர்களை த்வம்சம் பண்ணிடுவோம். அதனால நிச்சயமா எல்லாரும் எங்களுக்கு ஓட் பண்ணி ஜெயம் கொடுக்கணும்!"

இந்த பாஜக பரப்புரை வென்றால், அதுவே உண்மையான மோடி அலை, இந்துத்துவ அலை! அது வரை தமிழ் மண்ணில் மேவி தவழப் போவது பெரியார் அலையே!

(01.06.2014 ஆழம் இதழில் வெளியான கட்டுரை)

- நலங்கிள்ளி (enalankilli@gmail.com

சமூகக் கலை இலக்கிய இதழ்




நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் ‘அகநாழிகை’ இதழ், புதிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் எழுத்தாளர் பொன். வாசுதேவன். அகநாழிகையின் முதல் இரு இதழ்கள், இணையத்தில் காத்திரமாக எழுதத் தொடங்கிய படைப்பாளி களுக்கான களமாக இருந்தன. யாத்ரா, விநாயக முருகன்,

ச. முத்துவேல், காந்தி, நர்சிம், லாவண்யா சுந்தர்ராஜன், சுகிர்தா போன்ற இணைய எழுத்தாளர்கள் பலருக்கும் அகநாழிகை இதழ் அடுத்த பரிணாமத்திற்கான மேடையை அமைத்துத் தந்தது. அது மட்டுமல்லாமல் இவர்கள் பலரின் முதல் கவிதை, கதைத் தொகுப்புகளையும் அகநாழிகை வெளியிட்டது.

இந்த இதழில், கட்டுரை களுக்கான சிறப்பிதழைப் போல் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கவிஞர் ராஜசுந்தர்ராஜன், குட்டிரேவதி, இசை, தி. பரமேசுவரி, ஜீவ. கரிகாலன், எச். பீர் முகம்மது, சித்தார்த் வெங்கடேசன், ராஜ் சிவா ஆகிய எழுத்தாளர்கள் இந்த இதழுக்குப் பங்களித்துள்ளார்கள். இவை தவிர தி. பரமேசுவரி செய்துள்ள ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல் இதழுக்குக் கூடுதல் வலுச் சேர்க்கிறது.

பெருமாள் முருகனின் ‘வான்குருவியின் கூடு’ குறித்த இசையின் கட்டுரை வாசிப்புக்குச் சுவை சேர்க்கிறது. புவி வெப்பமயமாதல் குறித்த ராஜ் சிவாவின் கட்டுரை முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. இதழில் உள்ள கட்டுரைகளின் மொழி குறித்து ஆசிரியர் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். சில கட்டுரைகளின் மொழி வாசிப்புக்குச் சிக்கலாக இருக்கிறது. இலக்கியம், சமூகம், அரசியல் பல அம்சங்களுடன் வெளியாகி இருக்கும் அகநாழிகை, இந்த இதழ் மூலம் தன்னை நடுநிலை இதழாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது.

தி இந்து
 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger