Home » » 18-08-2013 தினமணியில் 6 கவிராயர்கள் அறிமுகம் !

18-08-2013 தினமணியில் 6 கவிராயர்கள் அறிமுகம் !

அட்டாவதானம் சரவணக் கவிராயர்

இவர் முதுகுளத்தூரில் பிறந்தவர். முத்துராமலிங்க சேதுபதியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். பணவிடு தூது, தருமர் அசுவமேதயாக புராணம், விநாயகர் திருமுகவிலாசம், முத்திருப்பப் பிள்ளை மீது காதல் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

அரங்கநாதக் கவிராயர்

இவர் சேக்கிழார் வழிவந்த மரபினர் என்பர். இவருடைய பாட்டனார்தான் சொக்கநாதப் புலவர். அரங்கநாதக் கவிராயர், கோட்டூர் சிற்றரசர் திருமலைரெட்டி என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க வில்லிபாரதத்தின் பிற்பகுதியை(2477 பாடல்கள்)ப் பாடியுள்ளார்.

முத்துக்குமாரக் கவிராயர் 

இவர் யாழ்ப்பாணம் அம்பலவாண பிள்ளையின் மகன். முத்துக்குமாரக் கவிராயரிடம் கல்வி பயின்ற மாணவர்தான் சி.வை.தாமோதரம் பிள்ளை. ஏசுமத பரிகாரம், ஞானக்கும்மி, நடராஜர் பதிகம், ஐயனார் ஊஞ்சல் முதலிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

அனந்த கவிராயர்

இவர் ரகுநாத சேதுபதியின் (சேதுநாடு) அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். ரகுநாத சேதுபதியைப் புகழ்ந்து பல பாடல்களையும், மதுரை பதிற்றுப்பத்து அந்தாதியையும் பாடியுள்ளார். சேதுபதியிடம் மானூரையும், கலையூரையும் இவர் நன்கொடையாகப் பெற்றுள்ளார்.

முருகேசக் கவிராயர்

இவர் பாளையஞ்சேரி என்ற கிராமத்தில் பிறந்தவர். பரசுராமப் பிள்ளையின் மகன். புதுக்கோட்டை அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர். பஞ்சரத்தின மாலை, ஆனந்தக் களிப்பு, சிந்து, உலகநாதசாமி சரித்திர அகவல் முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

சேறைக் கவிராயர்

இவர் திருச்சேறையில் (சோழநாடு) பிறந்தவர். இவருக்கு ஆசுகவி ராசர், ஆசு கவிராச சிங்கம், வண்ணக் களஞ்சியம் ஆகிய பட்டப்பெயர்களும் உண்டு. இவரை ஆதரித்துப் போற்றியவர் காளத்தி வேங்கடாசல முதலியார். இவர் திருக்காளத்திநாதர் உலா, திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை, சேயூர் முருகன் உலா, திருவண்ணாமலையார் வண்ணம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் காலத்துக்கு முந்தையவர் என்றும் கூறுவர்.

நன்றி :- தமிழ்மணி, தினமணி,18-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger