Home » » மொழியாக்க நூல்கள் ;- 24 சிறந்தனவற்றிற்கு சாகித்ய அகாதெமி விருது ( 2012 )

மொழியாக்க நூல்கள் ;- 24 சிறந்தனவற்றிற்கு சாகித்ய அகாதெமி விருது ( 2012 )


                       
                      சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது வழங்கும் 
                      விழாவில் பங்கேற்ற (இடமிருந்து) அகாதெமி
                      செயலாளர் கே. சீனிவாசராவ், விருது பெற்ற 
                      காஷ்மீரைச் சேர்ந்த ஷஷி பத்தனியா, 
                      திருநெல்வேலியைச் சேர்ந்த ம. இல. தங்கப்பா, 
                      சேலத்தைச் சேர்ந்த ஜி. நஞ்சுண்டன், விருது வழங்கிய 
                      அகாதெமி தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி, 
                      எழுத்தாளர் அசோகமித்ரன், 
                     அகாதெமி துணைத் தலைவர் சந்திரசேகர் கம்பார்.

மொழிபெயர்ப்பு நூல்கள் அதிக அளவிலான வாசகர்களை சென்று சேர வேண்டும் என்று எழுத்தாளர் அசோகமித்ரன் தெரிவித்தார்.

2012-ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை சர். பிட்டி தியாகராய அரங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்பட 24 மொழிகளில் வெளியான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து "அக்கா' எனும் தலைப்பில் வெளியிட்ட சேலத்தைச் சேர்ந்த ஜி.நஞ்சுண்டனுக்கு விருது வழங்கப்பட்டது.

தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து "லவ் ஸ்டேண்ட்ஸ் அலோன்' எனும் தலைப்பில் வெளியிட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.தங்கப்பாவுக்கும் விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் அசோகமித்ரன் பேசியதாவது:

சாகித்ய அகாதெமி விருது வழங்கும் விழாக்கள் பொதுவாக புது தில்லியில் நடைபெறுவதுதான் வழக்கம். சென்னையில் முதல்முறையாக மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்திய இலக்கியங்களுக்கு இன்றியமையாத பங்களிப்பை மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள் வழங்கி வருகிறார்கள்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பிற மொழி இலக்கியங்கள் அதிக அளவில் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு மிகப்பெரிய வாசகர் வட்டம் இருந்தது.

ஆனால் தற்போது மொழிபெயர்ப்பு நூல்கள் வாசகர்களைச் சென்றடைகிறதா என்பது சந்தேகமே.

மக்கள் மொழிபெயர்ப்பு நூல்களை அதிகம் விரும்பாததே அதற்குக் காரணம். செய்தித் தாள்களில் பல மொழி பெயர்ப்புக் கட்டுரைகள், விமர்சனங்கள் வருகின்றன. அத்தகைய மொழிபெயர்ப்பு அனைவரையும் சென்றடைகிறது.

இலக்கியங்களைப் பொருத்தவரை மொழிபெயர்ப்பு நூல்கள் அதிக அளவிலான வாசகர்களை சென்று சேர வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த நூல்களால் எந்தப் பயனும் இல்லை என்றார் அசோகமித்ரன்.

இந்த விழாவில் சாகித்ய அகாதெமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி பேசியதாவது: இந்தியா பல மொழிக் கலாசாரம் கொண்ட நாடு. இங்கு மொழிபெயர்ப்பு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பாலானவர்களுக்கு தாய்மொழியைத் தவிர பிற மொழிகள் தெரிவதில்லை. மொழி அறிவு இல்லை என்றாலும், வாசிப்புப் பழக்கம் கொண்ட மக்களுக்கு மொழிபெயர்ப்பு நூல்கள் அவசியமாகிறது என்றார் அவர்.

விருது வழங்கும் விழாவில் சாகித்ய அகாதெமியின் துணைத் தலைவர் சந்திரசேகர் கம்பார், செயலாளர் கே.சீனிவாசராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எழுத்தாளர்கள் சந்திப்பு: விருது பெற்ற மொழிபெயர்ப்பு நூலாசிரியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை 10.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக பவளவிழா அரங்கில் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கும் கதை, கவிதை, கட்டுரைகளை வாசிக்கும் அபிவிருக்தி - இலக்கியப் பகிர்வு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வை கவிஞர் வைரமுத்து தொடங்கி வைக்கிறார். எழுத்தாளர்களின் இலக்கிய பகிர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையும் (ஆகஸ்ட் 25) தொடரும் என சாகித்ய அகாதெமி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.                                                      
நன்றி :-தினமணி, 24-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger