Home » » “கல்யாணம் ஆகாத பெண்ணே ! உன்,கதிதன்னை நீ நிச்சயம்செய்க கண்ணே ! -சந்துரு

“கல்யாணம் ஆகாத பெண்ணே ! உன்,கதிதன்னை நீ நிச்சயம்செய்க கண்ணே ! -சந்துரு

நீதி சொல்லும் சேதி - முகமற்ற முகாம் கூலிகள் - நீதிநாயகம் சந்துரு
முள்வேலி முகாம்களில் ஈழத்து மகளிர் இன்னல் கேட்டு வேதனையடைந்த நாம் 21ம் நூற்றாண்டில் முகாம் கூலிகளாக சுரண்டப்படும் தமிழ்ப் பெண்களைப் பற்றி யோசிப்போமா?

ஈரோடு நூற்பாலையில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 45 பெண் கூலிகள் கொத்தடிமைச் சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட செய்தியால் ‘முகாம் கூலி’ (Camp Coolies) முறையை ஒழிக்க குரலெழுப்பப்பட்டுள்ளது.

20ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் பருத்தி ஆலைகளில் கணிசமாக பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலை இரண்டாம் உலகப் போரின் இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் எழுந்த சுதந்திரக் காற்றால் உருவாக்கப்பட்ட சட்டங்களில் பெண் தொழிலாளர் பற்றிய சிறப்புப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. தொழிற்சாலைச் சட்டத்தில் பெண் தொழிலாளர்களுக்கு தனிக் கழிப்பறை, பால்வாடி வைக்கவும் மற்றும் இரவு ஷிப்டில் பெண் வேலைக்குத் தடையும் உருவாயின. மகப்பேறு ஆதாயச் சட்டத்தில் ஊதியத்துடன் மும்மாத விடுமுறை குழந்தை பேற்றுக்கு அளிக்கப்பட்டது. பருத்தி ஆலைகளில் பெண்கள் எண்ணிக்கை குறைய இவையும் காரணமாயின.

பெண் எதிர்த்துப் பேச மாட்டாள். சங்கத்தில் இணைய மாட்டாள். கூலியையும் குறைத்து வேலைத்திறனையும் பெருக்கிக் கொள்ள ஆலை முதலாளிகள் தொழிலாளர் சட்டங்களை புறக்கணிக்க திட்டம் தீட்டினர்.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை வேலை வாங்குவதை குற்றமாக்கியதால், பெண் குழந்தைகள் பீடி மற்றும் வத்திப்பெட்டி ஆபீசுக்கும் போவது குறைந்ததால், 18 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு வலை வீச உருவானதே ‘திருமகள் திருமணத் திட்டம்’ (அ) ‘சுமங்கலித் திட்டம்’. கல்யாணத்துக்கு ஆகும் செலவினங்களை ஈடுகட்ட 3 வருடம் பருத்தி ஆலைக்கு பெண்ணை அனுப்பினால் ஒப்பந்தக் காலத்தின் முடிவில் ரூ.30,000 கொடுப்பதாகவும், மில் வளாகத்திலேயே தங்கி பயிற்சியாளராக மூன்று ஷிப்டுகளிலும் பணிபுரிந்தால் சொற்ப சம்பளமும், சோறும் போடப்படும். ஆண்டுக்கு இரு நாள் பெற்றோர்களைப் பார்க்க பரோல் உண்டு.

தொழிற்சாலை சட்டப்பிரிவு 66ல் பெண்கள் இரவு ஷிப்ட் செய்ய தடையை எதிர்த்து வசந்தா என்ற பெண் வழக்கு போட்டார். அச்சட்டம் தவறென்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2007ல் முகாம் கூலிகளின் எண்ணிக்கை ஈரோடு, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டும் 40 ஆயிரத்தைத் தாண்டியது. மேற்கு மற்றும் தெற்கிலுள்ள 17 மாவட்டங்கள் கொத்தடிமைகளை பணிக்கு எடுக்கும் வேட்டைக் காடுகளாயின.

சுமங்கலி கனவுகளில் மிதந்த பெண்கள், 12 மணி நேர வேலை, விடுமுறைகள் தவிர்ப்பு, பாலியல் தொல்லை, திட்ட முடிவில் கொடுத்த செக் மோசடி புகார் பட்டியல்கள் பொங்கவே தொழிற்சங்கங்களும், மகளிர் அமைப்புகளும் ‘முகாம் கூலி’ முறையை ஒழிக்க வேண்டுகோள் விடுத்தன. தமிழக அரசோ அதைப் புறக்கணித்து கண்காணிப்புக் குழுக்களை மட்டுமே அமைத்துள்ளது.

தமிழகத்தை விடுத்து வட இந்திய வேட்டையில் சிக்கிய பெண்கள் கொத்தடிமைச் சட்டத்தில் விடுவிக்கப்பட்டது முகாம் கூலிகளின் பிரச்சினைகளை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

முள்வேலி முகாம் பற்றி கவலைப்படும் வேளையில் தமிழக வேலிகளில் அடைக்கப்பட்ட அபலைகளைப் பற்றியும் கவனம் கொள்வோம். அதுவரை அவதிப்படும் அபலைகளுக்கு பாவேந்தரின் கவிதை வரிகள்:

“கல்யாணம் ஆகாத பெண்ணே ! உன்,கதிதன்னை நீ நிச்சயம்செய்க கண்ணே !

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger