Home » » வாராக் கடன்கள் - கருப்புப்பணம் -ஊழல் - சரிசெய்ய முடியாதா? முடியும் ஆனால் முடியாது

வாராக் கடன்கள் - கருப்புப்பணம் -ஊழல் - சரிசெய்ய முடியாதா? முடியும் ஆனால் முடியாது

                      உதையை மு.வீரையன்

சுதந்திரம் அடைந்த பிறகு நமது ஆட்சியில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது; வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது; நாம் போட்ட திட்டங்கள் பலன்தர ஆரம்பித்திருக்கிறது; புதிய பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால் நாம் சரியான திசைவழியில் பயணிக்கிறோம் என்பது நிரூபணம் ஆகிறது' - இவ்வாறு நாள்தோறும், மேடைதோறும் பேசிக் கொண்டிருந்த மத்திய ஆட்சியாளர்கள் இப்போது தலைகீழாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

""உலக அளவில் பொருளாதார மந்தநிலை தொடரும் நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 விழுக்காட்டை எட்டுவது சாத்தியமில்லை'' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்
.
தலைநகர் தில்லியில் கடந்த 2013 ஜூலை 19 அன்று நடைபெற்ற இந்தியத் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் (அசோசேம்) ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் இவ்வாறு பேசியுள்ளார்.

அன்னியச் செலாவணிச் சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுவது கவலையளிக்கிறது என்றும், சந்தையை மீண்டெழச் செய்ய மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும் சமாதானப்படுத்தியுள்ளார்.

2004 முதல் காங்கிரஸ் கூட்டணி அரசுதான் ஆட்சி செய்கிறது. பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்து வருவதாகவே இதுவரை கூறி வந்தனர். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் நாட்டின் பொதுத்துறைகளை எல்லாம் விற்கத் தொடங்கியிருக்கின்றனர். லஞ்சம், ஊழல் காரணமாக இந்தியாவின் பொருளாதாரமே சீரழிந்து கிடக்கிறது.

மக்களின் வாழ்வாதாரம் நிலைகுலைந்து போய்க் கிடக்கிறது; விலைவாசி விண்ணைத் தொடுகிறது. ஆனால், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வோர் தொகை குறைந்து போய்விட்டதாக புள்ளிவிவரம் காட்டுகிறார்கள்.

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம், கடந்த எட்டு ஆண்டுகளில் (2004-2012) வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 37 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக (அதாவது 15 விழுக்காடு) குறைந்துள்ளது என்று கூறியுள்ளது. நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு 33.30 ரூபாயும், கிராமப்புறங்களில் 27.20 ரூபாயும் வருவாய் வருமானால் அவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளதாக மத்திய திட்டக்குழு தானாகவே முடிவு செய்து கொண்டு விட்டது.

""கடந்த ஓராண்டாக மிக மோசமான பொருளாதாரச் சூழ்நிலை நிலவுகிறது என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். இதிலிருந்து விரைவில் மீண்டெழுவோம். பொருளாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். பொருளாதாரம் மிக மோசமாக இருந்த கடந்த ஓராண்டைப் பற்றியே எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். இது மக்களிடையே தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது...'' என்று பிரதமர் கூறுகிறார்.

2012-13 ஆம் நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. இது இந்தியாவின் மரியாதையை உலக அளவில் குறைத்துவிட்டது. இதிலிருந்து மீண்டு எழுவதற்கு என்ன வழி?

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் தங்கம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் தேவையைக் குறைக்க வேண்டும். அவற்றின் இறக்குமதியையும் குறைக்க வேண்டும். பொருளாதாரம் புரிந்தவர்கள் இப்படித்தான் கூறுகிறார்கள். ஆனால், அரசாங்கம் செய்வது என்ன?

2004 - 2012 காலகட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோரின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் ஆண்டுக்கு 2 விழுக்காடு என்ற அளவில் குறைந்து வந்துள்ளது; இது மிகவும் பெருமைப்படும் விஷயமாகும் என்று அரசு கூறுகிறது. "பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது' என்பார்கள். இப்போது அரசாங்கக் கணக்கும் அப்படித்தான் இருக்கிறது. பசிக்கிறவனுக்குத் தேவை உணவுதானே தவிர உபதேசமல்ல என்பதை இவர்களுக்கு யார் எடுத்துச் சொல்வது?

அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்தாத பல கோடி "வாராக் கடன்'களை வசூலிக்காமல் வாளாவிருப்பது ஏன்? 

வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வருவதற்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மௌனம் ஏன்? கோடி 
கோடியாகக் கொள்ளை போகும் ஊழலையும், லஞ்சத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன்? 

இந்தியப் பொருளாதாரத்துக்குச் சவால் விடும் இவைகளைச் சரிசெய்ய முடியாதா? முடியும், ஆனால் முடியாது.

இப்போது இந்திய வங்கிகளின் முறைகேடுகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. புது தில்லியில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை இதனை ஒப்புக்கொண்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் இது சாதாரணமாக இருக்கலாம்; ஆனால் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் விவரங்களை பெறத் தவறியது, கருப்புப்பணப் பரிவர்த்தனை குறித்த விதிமீறல், பணப்பரிமாற்றம் பற்றி முறையான அறிக்கை அளிக்காதது, ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிக மதிப்பிலான தங்கக் காசு விற்பனை பற்றிய அறிக்கை அளிக்காதது ஆகிய புகார்கள் தொடர்பாக 22 வங்கிகளுக்கு ரூ. 49.5 கோடி அளவிலான அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர் பற்றி முறையான விவரங்கள் பெறாமல் வைப்புத் தொகை பெறுகின்றன என்றும், இதனால் கருப்புப் பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது என்றும் இணையதளம் ஒன்று புலனாய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், ரிசர்வ் வங்கி விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையில் இது உண்மை என்பது வெளிப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கி உள்பட 22 வங்கிகள் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளன என்பதால் அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை எப்படிக் கட்டுவார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

""வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம்'' என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உறுதி கூறினார். உச்ச நீதிமன்றம் பலமுறை கேள்விகளை எழுப்பியது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் நிதியமைச்சராக இருந்தபோது, ""கருப்புப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கை தொடங்கிவிட்டது'' என்று கூறினார். மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இதுவரை எதுவும் நடக்கவில்லை.

அடிக்கடி வரும் செய்திகள் நாட்டில் கருப்புப் பணத்தின் பெருக்கத்தைப் பறைசாற்றுகின்றன. இப்போது ஒரு செய்தி: கணக்கில் காட்டப்படாத பெருமளவிலான பணம் மும்பையிலிருந்து குஜராத்துக்கு நான்கு லாரிகளில் கடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி ரகசியத் தகவல் கிடைத்ததன் பேரில் வருமான வரித்துறையினரும், தேசிய புலனாய்வு அமைப்பினரும் (என்.ஐ.ஏ.) இணைந்து கடந்த 2013 ஜூலை முதல்நாள் இரவு நடத்திய அதிரடிச் சோதனையில் 150 பைகளில் இருந்த பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மும்பையிலிருந்து குஜராத்துக்கு தனியார் கூரியர் சேவை மூலம் லாரிகளில் கட்டுக்கட்டாக பணமும் நகைகளும் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு லாரியிலும் சுமார் 15 பேர் வரை பாதுகாப்புக்கு வந்துள்ளனர்.

பணத்தை எண்ணுவதிலும், தங்க, வைர நகைகளை எடைபோட்டு மதிப்பிடும் பணியிலும் 50 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்பணி முடிந்த பிறகுதான் அவற்றின் மொத்த மதிப்பை சரியாகக் கூற முடியும் என்று வருமான வரித்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இந்தப் பணம் முழுவதும் கணக்கில் வராதவை என்றும், இப்பணம் ஹவாலா பரிமாற்றம் மூலம் கொண்டு வரப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்பணம் பயங்கரவாதிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டதா? அல்லது அரசியல் கட்சிகளின் நிதிக்காக எடுத்துச் செல்லப்பட்டதா?' என்பது உறுதி செய்யப்படவில்லை. இதில் கவனிக்கப்பட வேண்டியதும், கவலைப்பட வேண்டியதும் பணம் எடுத்துச் சென்ற லாரிகள் மும்பை போலீஸ் பாதுகாப்புடன் சென்றுள்ளது என்பதுதான். இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பணம், நகைகள் கணக்கில் காட்டப்படாதவைதானா என்பதை உறுதி செய்வது போலீஸாரின் வேலையல்ல என்று மும்பை போலீஸ் உயர் அதிகாரி கூறியுள்ளார். இதில் எல்லாருக்கும் பங்கு இருப்பதையே இந்தப் பொறுப்பற்ற பேச்சு வெளிப்படுத்துகிறது.

சில ஊடகங்கள் கூறியுள்ளதுபோல ரூ. 1,000 கோடி பணம், நகைகள் கைப்பற்றப்படவில்லை என்றும், அவற்றின் மதிப்பு நிச்சயமாக ரூ. 200 கோடிக்குமேல் இருக்கும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பின் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

இந்தக் கருப்புப் பணம் யாரால் யாருக்கு அனுப்பப்பட்டது? இதன் சரியான மதிப்பு என்ன? என்பது பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. அடிக்கடி சிபிஐ சோதனை என்ற செய்திகள் வரும்; ஆனால், அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளிவருவதில்லை.

வெளிநாட்டு வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள கருப்புப்பணம் பற்றிய விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. அரசாங்க வங்கிகளை ஏமாற்றியுள்ள "வாராக்கடன்'களைப் பெற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. இதற்கு எல்லாம் காரணம் இல்லாமல் இருக்குமா? "சட்டத்தில் இடம் இல்லை' என்பதே அதிகாரப்பூர்வ பதிலாகும். ஆனால், அதற்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது.

இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டிய குறுகியகால கடன் 172 பில்லியன் டாலர். அதாவது, 10 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயாகும் என்று கூறப்படுகிறது. மொத்த அன்னிய செலாவணிக் கையிருப்பில் 60 விழுக்காடு நாட்டை விட்டுப் போய்விடும் என்று பொருளியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட நெருக்கடிகளிலிருந்து மீண்டு எழ வேண்டிய நேரம் இது.

""நாட்டின் பொருளாதாரம் மேம்பட ஓராண்டுக்கு தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம்'' என்று நிதியமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் விற்பனையாகும் மொத்தத் தங்கத்தில் நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய ஆபரணத் தங்கத்தின் அளவு மிகவும் குறைவு.

இவர்கள் வாங்கும் தங்கத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதில்லை. மாறாக, கணக்கில் காட்டப்படாத கருப்புப்பணம் வைத்திருப்பவர்களும், பெரும் செல்வந்தர்களும்தான் அதிக அளவில் தங்கக் கட்டிகள் வாங்கிப் பதுக்குகின்றனர். இவர்கள் மேல் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அறநெறிகளைப் புறம் தள்ளிவிட்டு, எதையும் விலை பேச முடியும் என்று எண்ணும் ஒரு கூட்டத்துக்கு அரசின் சட்டமும் ஒழுங்கும் துணை போகுமானால் அந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.
இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம், இந்திய மக்களின் எதிர்காலம் இரண்டும் ஒன்றுதான். இரண்டுமே தற்போது கேள்விக்குறிதான்.

கட்டுரையாளர்:

பணி நிறைவுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்.

நன்றி :- தினமணி, 31-07-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger