Home » » 'அறியப்படாத' தமிழக நதிநீர்ப் பிரச்னைகள் - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

'அறியப்படாத' தமிழக நதிநீர்ப் பிரச்னைகள் - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்



காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல், சிறுவாணி போன்ற பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன என்பதை அறிவோம். ஆனால், இன்னும் அறியப்படாத பல தமிழக நதிநீர் தாவாக்கள் தமிழக மக்களின் கவனத்திற்கு வராமல் அரசின் கோப்பில் மட்டுமே பல ஆண்டுகளாக கேள்விக்குறியாக உள்ளன. அவைகளில் சில:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1963-இல் திறக்கப்பட்ட நெய்யாறு அணையை கேரளம்  மூடிவிட்டது. இதனால் விளவன்கோடு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் விவசாயம் கேரளத்தின் செயலால் பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே 1989-இல் கட்டப்பட்ட அடவிநயினார் அணையை இடிக்க கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கடப்பாறை, மண்வெட்டியோடு வந்தார். அங்கும் நதிநீர் வரத்து தடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சொக்கம்பட்டி அருகே அமைந்த செண்பகவல்லி அணையைத் தமிழகத்திற்குத் தெரியாமல் கேரள அரசு ஊழியர்கள் நமது எல்லைக்கே வந்து 1994-ஆம் ஆண்டு மார்ச் 14-இல் இடித்துத் தள்ளினர். இதைப் பற்றி 19 ஆண்டுகள் ஆகியும் தமிழக மக்களுக்குத் தெரியவில்லை.

நெல்லை மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் அருகே உள்ளார் திட்டம் நிறைவேற்றுவதில் கேரளம் முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்தவித முயற்சியும் எடுத்துவருவதாகத் தெரியவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் அருகே ரூ.300 கோடி மதிப்பீட்டில் அழகர் அணை திட்டம் 50 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் போராடியும் கேரளத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. 1970-இல் இதற்கான ஆய்வுப் பணிகளும் நடந்தன. இதனால் வானம் பார்த்த வறட்சியான கரிசல் பகுதிகள் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், பாசன வசதி பெறும். சொல்லி என்ன பயன்? திட்டம் நிறைவேறுவதாகத் தெரியவில்லையே!

தேனி மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஆலடி அணை கட்ட 1970-இல் திட்டமிடப்பட்டது. இதனால் பெரியகுளம், நிலக்கோட்டை, திண்டுக்கல் வரை பாசன வசதி பெறும். இதற்கும் கேரளம் அனுமதி தராமல் புறக்கணிக்கின்றது.

கோவை மாவட்டத்தில் தமிழகம் 138 கோடி ரூபாய் செலவில் கட்டிய ஆழியாறு - பரம்பிக்குளம் முறையாகச் செயல்பட்டால் 2.6 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்; அதேபோன்றதுதான் லட்சக்கணக்கான ஏக்கருக்குப் பயன்தரும் பாண்டியாறு - புன்னம்புழா திட்டம். இரண்டு பிரச்னைகளிலும் கேரளம் தொடர்ந்து பாராமுகம் காட்டி வருகிறது.

மத்திய அரசு பரிந்துரைத்த திட்டங்களாவன:

1) மேற்கு நோக்கி கேரளத்தில் அரபிக்கடலில் பாயும் நதிகளின் உபரி நீரைத் தமிழகம் திருப்பும் திட்டம் - 1973-இலிருந்து விவாதத்தில் உள்ளது;

2) கேரளத்தில் இருக்கும் அச்சன் கோவில் - பம்பை - தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறோடு இணைப்பு;

3) பம்பை - வைகை இணைப்பு ஆகிய திட்டங்களுக்கு கேரளம் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது. இவை யாவும் சாத்தியமானது என வல்லுநர் அறிக்கைகள் மத்திய அரசுக்கு வழங்கியும் கேரளத்தின் பிடிவாதத்தால் நிறைவேற்ற முடியவில்லை.

நந்தி மலையில் உற்பத்தியாகி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற 5 மாவட்டங்களில் 30 லட்சம் ஏக்கரில் பாசன வசதி தரும் தென்பெண்ணையில் கர்நாடகமும், ஆந்திரமும் பிரச்னை செய்கின்றன.

பொன்னியாறு, தெலுங்கு கங்கை, திருவள்ளூர் மாவட்டத்தில் 6,125 ஏக்கர் பாசன வசதி பெறும் கொற்றலை ஆற்றுத் தண்ணீர் வராமல் ஆந்திரம் தடுப்பு அணைகளைக் கட்டுகிறது. பழவேற்காடு ஏரிப் பிரச்னையில் தொடர்ந்து ஆந்திரம் சிக்கலைத் தருகிறது. தமிழக மீனவர்களும் பழவேற்காடு ஏரிப் பிரச்னையில் பாதிக்கப்படுகின்றனர்.

கேரளத்தில் நீர்வளம், வனவளம் அதிகம். கர்நாடகத்தில் நீர்வளம், தாதுவளம், வனவளம் அதிகம். ஆந்திரத்தில் நீர்வளம், தாதுவளம் அதிகம்.

தமிழகத்தில் நீர்வளம் குறைவு; ஆனால், தமிழகத்தில் மனித ஆற்றல் அதிகம். நம்மிடம் மின்சாரம், மணல், அரிசி, காய்கறி எனப் பல அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொண்டு, கூட்டாட்சி அமைப்பின் அடிப்படை மறந்து அண்டை மாநிலங்கள் பிடிவாதமாக இருப்பது கவலையைத் தருகிறது.

இவ்வாறு இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே நதிநீர் பிரச்னைகள் தீர்க்க முடியாமல் உள்ளன. ஆனால், பன்னாட்டு அளவில் நாடுகளின் நதிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. சில சான்றுகள்; ஆப்பிரிக்காவில் எகிப்து நதி; தென்கிழக்கு ஆசியாவில் பாயும் மிகாங் நதி பிரச்னை குறித்து தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் இடையே ஐக்கிய நாடுகள் மத்தியஸ்தத்தில் பேசித் தீர்த்தன.

அமெரிக்காவில் டெலவர் நதி, ஆஸ்திரியாவுக்கும் - துருக்கிக்கும் டான் நதி, ஜெர்மனிக்கும் - பிரான்சுக்கும் ரைன் நதி, ஆப்பிரிக்காவில் நைஜர், செனகல், இஸ்ரேல் - பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கிடையே ஜோர்டான் நதி, துருக்கி - சிரியா - இராக் வழியாகப் பாயும் யூப்ரடீஸ் போன்ற நதிநீர்ப் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் அஸ்வான் அணைக்கட்டுப் பிரச்னையில் சூடானுக்குச் சாதகமாகவும் (ஆயக்கட்டுப் பகுதி), கொலம்பியா நதிநீர்ப் பிரச்னையில் அமெரிக்கா, கனடா ஒப்பந்தம் மூலமும் இவ்வாறே தீர்க்கப்பட்டன.

நேபாளத்திலிருந்து இந்தியா வழியாகச் செல்லும் கங்கை நதியின் பராக்கா தடுப்பு அணை சம்பந்தமாகப் பிரச்னை ஏற்பட்டபோது வங்க தேசம் மிகவும் பிரச்னை செய்தது. அந்நாட்டோடு பேசித் தீர்க்கப்பட்டது.

பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஜீனாப் நதி, ஜீலம் நதிப் பிரச்னையிலும் மற்றும் கிஷன் கங்கா பிரச்னையிலும் சுமுகத் தீர்வு ஏற்படுகின்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

உலக அளவில் பல நதிநீர்ப் பிரச்னைகள் தீர்க்கப்படும்போது, இந்தியாவில் ஒரு மாநிலத்துக்கும், இன்னொரு மாநிலத்துக்கும் இடையே உள்ள நதிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க தாமதமும், பிடிவாதமும், தேவையற்ற சச்சரவுகளும் ஏன் என்று தெரியவில்லை.

நேரு ஆட்சிக்காலத்தில், ஹிராகுட் அணை, தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்தில் மேற்கு வங்கம், பிகார் மாநிலங்ளுக்கிடையே தகராறு எழுந்தது. அப்போது சட்டம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர், கண்டிப்போடு அணுகி அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைத்தார். அதேபோன்று ஒடிசா, மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட நதிநீர்ப் பிரச்னை அம்பேத்கர் நடந்துகொண்ட கண்டிப்பான முறையில் தீர்த்து வைக்கப்பட்டது. அம்மாதிரியான கண்டிப்பான அணுகுமுறை இப்போது ஏன் இல்லாமல் போய்விட்டது?

ஹார்மன் கோட்பாடு, ஹெல்சிங்கி கொள்கை ஆகியவை சர்வதேச நதிநீர்ப் பிரச்னைகளைத் தீர்க்கப் பயன்படுகிறது. இருதரப்பும் பேச்சுவார்த்தை, சமரசம், சமாதானம், விசாரணை, சம்மதம், பின் நீதிமன்ற முடிவு அல்லது மற்ற இருதரப்பும் ஒப்புக்கொள்கின்ற அமைதியான வேறு வழிகளைக்கொண்டு பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

1966-இல் ஆகஸ்டு 20 அன்று ஹெல்சிங்கியில் நடைபெற்ற நதிநீர் மாநாட்டில் ஐ.நா. மன்றமும், சட்ட வல்லுநர்களும் கலந்துகொண்டு நதிநீர் தாவாக்களைத் தீர்க்க முக்கிய முடிவுகளை எடுத்தனர்.

அவை 1. நதிநீர் வடிநிலப் பகுதி உள்ள ஆறுகள், ஏரிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பார்க்க வேண்டும்.

 2. உடன்பாடு, பாத்தியம், பழக்கவழக்கங்கள் அடிப்படையில் நதிநீர்ப் பிரச்னையில் தீர்வுகாண வேண்டும்.

 3. ஆறுகள் பாயும் அனைத்துப் படுகைப் பகுதிகளுக்கும் ஆற்றின் மீது உரிமை உண்டு.

 4. நீர்ப் பகிர்வுக்கு உண்மையான விவரங்களைக் கொண்டு தீர்வு மேற்கொள்ள வேண்டும்.     5. ஒரு நாட்டின் உரிமையில் மற்ற நாடு குறுக்கீடு செய்யக் கூடாது.

இந்தக் கட்டுரையாளர் தொடர்ந்த வழக்கில், நதிகள் தேசியமயமாக்கல், நதிகள் இணைப்பு குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குக் கடந்த 2012, பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் தங்களுக்கு அக்கறை இருப்பதாகக் கூறி வரும் மத்திய அரசு, இதுவரை அதற்கான ஈடுபாட்டைக் காட்டவில்லை.

நதிநீர் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த "நதிநீர் இணைப்புக்கான சிறப்பு உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும். அக்குழுவுக்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் தலைமை வகிக்க வேண்டும். குழுவில் மத்திய நீர்வளத்துறை செயலர், மத்திய வனம், சுற்றுச்சூழல் துறைச் செயலர், மத்திய நீர்வள ஆணையத் தலைவர், தேசிய நீர் மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் - செயலர் உள்பட 15 பேர் இடம் பெற வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இக்குழு கூடி, திட்ட அமலாக்கம் பற்றிய முடிவுகளை ஆராய வேண்டும். ஆண்டுக்கு இருமுறை அதன் அறிக்கையை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்ய வேண்டும்; நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றும்போது, பல கட்டங்களில் திட்டமிடுவது, அமல்படுத்துவது, நிறைவேற்றுவது ஆகிய பணிகளை சிறப்புக்குழு மேற்கொள்ள வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள் ஆகும். இந்தப் பரிந்துரைகளை ஓராண்டாகியும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. எனவே உடனே நிறைவேற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

நதிகள் இணைப்பு நடவடிக்கைக்கு தமிழ்நாடு, ஆந்திரம், பிகார், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் எதிர்த்தன.

தமிழகத்தில் தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு  ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதுதான் தமிழ்நாட்டின் முதல் நதிகள் இணைப்புத்திட்டமாக இருக்கும்.

""இந்த நதிகள் இணைப்புத்திட்டம் செயல்வடிவம் பெற்றால், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும். இதற்கு வழியமைக்கும் வகையில், கனடியன் அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் நீர், மணிமுத்தாறு கால்வாய்  வழியாக, சாத்தான்குளம், திசையன்விளை சென்றடையும். கேரளத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் நதிகள் இணைக்கப்பட்டால், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, கோவை, ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகள் பாசன வசதி பெறும். கங்கை -காவிரி நதிகளுடன் தாமிரபரணி வரை இணைத்து, கேரளத்தில் ஓடும் அச்சன்கோவில், பம்பை நதிகளை வைப்பாற்றுடன் இணைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற மனுவின் சாரம்.

கேரளத்தில் ஆறுகளில் நீர்வளம் 2,500 டி.எம்.சி அதிகம். இதில் கேரளம் பயன்படுத்துவது வெறும் 600 டி.எம்.சிதான். மீதி கடலுக்குச் செல்கிறது. அதில் 400 டி.எம்.சி.யை தமிழகத்துக்குக் கொடுக்க மறுக்கிறது. இது என்ன நியாயம்? இதில் பல நீர்பிடிப்புப் பகுதிகள் தமிழக எல்லையொட்டி உள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைந்து விடுவது மட்டுமல்லாமல் உவர் நீராக மாறி வருகிறது. இதை ஐ.நா. அறிக்கைகூட எச்சரித்துள்ளது. பண்டைக் காலத்து தமிழகம் நீர் நிர்வாகத்தில் கவனமாக இருந்ததால் கல்லணை, ஏரிகள், குளங்கள் அமைந்தன. இன்று ஏரிகள், குளங்கள் வீட்டுமனைகளுக்காகக் கபளிகரம் செய்யப்படுகின்றன.

1965-2000-க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்த 37 சதவீத குளத்து நீர்ப் பாசனங்கள் அழிந்து விட்டன. தமிழ்நாட்டில் மொத்த ஏரிகள் 39,402. இதில் பல ஏரிகள் காணாமற் போய்விட்டன.

இந்தியாவில் ஓடும் நதிகளின் நீர்வளத்தில் 20 சதவீதம் மட்டுமே மக்கள் பயன்பாட்டுக்கு உள்ளது. மீதம் 80 சதவீதமும் கடலில் வீணாகக் கலக்கிறது. அதில் நாற்பது சதவீத நீரை முறையாகப் பயன்படுத்தினால் சுமார் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது நதிகள் இணைப்பு நிபுணர்களின் வாதம்.

தேசிய நதிகளை இணைப்பதன் மூலம், பாசன வசதி, உள்நாட்டில் மீன்பிடித் தொழில் மேம்படும், நீர்வழிப் பயண வசதி ஏற்படும். குடிநீர் வசதி, நீர்மின் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். இவற்றின் மூலம் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.

உலக மக்கள்தொகையில் 17 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். நீர் வளத்தில் 4 விழுக்காடு, உலக நிலப்பரப்பில் 2.6 விழுக்காடு மட்டுமே இந்தியாவுக்குச் சொந்தமானது. நீர்ப் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகமாகி விட்டது. மக்கள்தொகைப் பெருக்கம், நகர மயமாக்கல், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஆகியவற்றால் நீர்த் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. பருவநிலை மாற்றம் நிலத்தடி நீர் குறைவு ஆகியவற்றால் நீர் வளம் குறைந்து வருகிறது. நீரைத் தனியாருக்குத்  தாரை வார்க்கவும் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

இனிமேலாவது நீர் மேலாண்மையை விழிப்புணர்வோடு அணுகி நாம் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்னைகளால் உலகப் போர் ஏற்படும் என்று பலர் சொல்கின்றனர். தமிழகத்தில் அறிந்தும் அறியாத நதிநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு வந்தால்தான் தமிழகம் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

(கட்டுரையாளர்: வழக்குரைஞர்)

நன்றி :- தினமணி, 22-0-5-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger