Home » » மதுரையில் 19,500 மனைகளுடன் துணை நகரம்: ஜெயலலிதா உத்தரவு

மதுரையில் 19,500 மனைகளுடன் துணை நகரம்: ஜெயலலிதா உத்தரவு

 மதுரையில் 586.86 ஏக்கர் நிலத்தில், 19,500 மனைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த துணை நகரத்தை உருவாக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தும் திட்டங்களில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக முன் கட்டுமான தொழில்நுட்பத்தை அதாவது Prefab Technology என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, கட்டட பாகங்களான தூண், உத்திரம், மாடிப்படி, கூரை ஆகியவைகள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு, உபயோகத்திற்கு கொண்டு செல்வதற்கு முன் தண்ணீர் மூலம் Curing செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்படும். கட்டுமான பாகங்கள் தயாரிக்கப்பட்ட பின் அவைகள் கட்டுமான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு அதற்குரிய இடங்களில் இயந்திரங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டு, கலக்கப்பட்ட திண்காரை கலவை மூலம் இணைக்கப்படும். 24 மாடிகள் கொண்ட உயர் அடுக்குமாடிக் கட்டடங்களை இத்தொழில்நுட்பத்தின் மூலம் 24 மாதங்களில் கட்டி முடிக்க இயலும்.

முன் கட்டுமான தொழில்நுட்பம் என்ற இந்த நவீன தொழில்நுட்பம் முதற்கட்டமாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சோழிங்கநல்லூரில் கட்டப்பட உள்ள 1,500 பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் பயன்படுத்தவும், இத்திட்டத்தினை செயல்படுத்த 379 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை நகரத்தில் வசிக்கும் மக்களின் வீட்டு வசதி தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் வீட்டு வசதி தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வீட்டு வசதித் திட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் மாநிலத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் தற்பொழுது பெருகி வரும் வீட்டு வசதித் தேவையினைக் கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையத்திற்கு அருகில் மதுரை - திருநெல்வேலி நான்கு வழிப்பாதையில் தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒரு ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரத்தை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த துணைக்கோள் நகரத்தில் 19,500 மனைகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் 14,300 மனைகள் குறைந்த வருவாய் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த துணைக்கோள் நகரத்தில் குடியேறும் மக்களின் நலனுக்காக பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என அனைத்து வசதிகளும் உருவாக்கப்படும்.

முதற்கட்டமாக, இந்த துணைக்கோள் நகரத்தில் அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர் வசதி, கழிவுநீர், வடிகால் வசதி, மழைநீர் கால்வாய், சிறுபாலங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளுக்காக 120 கோடி ருபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.                                                                                                                      

தி இந்து -20-10-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger